மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படம் தமிழக அளவில் முதல் நாள் வசூலில் 3-வது இடத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு சில படங்களை ரசிகர்களை திருப்திப்படுத்தி வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு நிறைவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தற்போதுவரை வெளியாகியுள்ள படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி அஜித் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளில் 36.17 கோடி வசூல் செய்து முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான பீஸ்ட் (27.40) உள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப் 30) வெளியான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் 27 கோடி ரூபாய் வசூல் செய்து 3-வது இடத்தை பெற்றுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்தீபன், நாசர் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார். 3 தலைமுறை இயக்குநர்கள் முயற்சி செய்தும் முடியாமல் போன் பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் கையால் உருவாகியுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டீவான கருத்துக்களை பெற்று வருகிறது. 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படம், தற்போது முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல்நாள் அதிக வசூல் செய்த படங்களில் பட்டியலில் 4-வது இடத்தில் விக்ரம், 5-வது இடத்தில் எதற்கும் துணிந்தவன், 6-வது இடத்தில் ஆர்.ஆர்.ஆர், 7-வது இடத்தில் திருச்சிற்றம்பலம், 8-வது இடத்தில் டான், 9-வது இடத்தில் கோப்ரா, 10-வது இடத்தில் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil