/indian-express-tamil/media/media_files/2025/08/06/dhanayanjayan-2025-08-06-17-36-22.jpg)
தமிழகத்தில் தற்போது இருந்து வரும் சாதி பாகுபாடுகளுக்கு சாதிப்படங்கள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறி வரும் நிலையில், இப்போதைக்கு சாதிப்படங்கள் தேவையில்லை சாதி மறுப்பு படங்கள் தான் தேவை என்று தயாரிப்பாளர் தனஞ்சேயன் கூறியுள்ளார்.
சினிமா என்பது மக்களின் பொழுபோக்கு என்றாலும் இதன் வழியாக நல்லதையும் தெரிவிக்க முடியும், அதே சமயம், அதில் இருக்கும் கெட்ட விஷயங்களுக்கு துணை போனால் என்ன நடக்கும் என்பதையும் தெரிவிக்க முடியும். சினிமாவை பொழுதுபோக்காக பார்ப்பவர்கள் அதிகம் இருந்தாலும், அதை உன்னிப்பாக கவனித்து அதில் வில்லன், அல்லது ஹீரோ செய்யும் செயல்களை தங்கள் ரியல் வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குறிப்பாக சாதிப்படங்கள் என்று வந்துவிட்டால், பலரும் அதில் ஹீரோ வில்லன் என இருவரையும் வெவ்வெறு சாரார் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது. இதற்கு முக்கிய உதாரணமாக மாமன்னன் படத்தை சொல்லலாம். இந்த படம் வெளியானபோது ஹீரோ வடிவேலு, உதயநிதியை விட, அதிகமாக கொண்டாடப்பட்டவர், அதில் வில்லன் ரத்தினவேலு கேரக்டரில் நடித்திருந்த பஹத் பாசில் தான். இதேபோல் பல உதாரணங்களை சொல்லலாம். சமீபத்தில் நடந்த ஆணவக்கொலைகளை வைத்து இப்போது இந்த சாதிப்படங்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்சேயன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், இந்த சாதிய படங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இன்னும் ஏன் சாதிப்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை. இதை பற்றி சொல்லவில்லை என்றால் அதை பற்றி தெரியாமல் போய்விடும் என்று சொல்லலாம். ஆனாலும், அதை சொல்ல, சொல்ல, சாதி உணர்வு இன்னும் அதிகமாகிறது. சினிமாவில் யாருக்கும் யார் சாதியும் தெரியாது. அதேபோல் இந்த உலகம் மாற வேண்டும்.
நான் என் பசங்களுக்கு சாதி இல்லாமல் தான் வளர்த்தேன். அவர்கள் என்ன சாதி என்று நான் சொன்னது இல்லை. சாதி என்ற கட்டமைப்புக்குள் அவர்கள் வந்ததும் இல்லை. என் பிள்ளைகள் யாரை காதலித்தாலும், காதலிக்கும் பையனின் குடும்பத்துடன் ஒத்துபோக வேண்டும் என்று தான் சொல்வேன். சாதியை காரணம் காட்டி ஏதாவது பெரிய தவறு செய்துவிட்டால் அந்த சாதி சங்கம் அவருக்கு என்ன மணி மண்டபம் கட்டப்போகிறதா? சாதியை வளர்ப்பதில் சினிமா ஒரு தூண்டுகோளாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
பல நடிகர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி இல்லை என்று சொல்கிறார்கள்.
அதை உயர்த்தி பிடித்து படங்கள் பண்ணலாம். இப்படி செய்தால் சமுதாயம் மாறும். ஏன் சாதியை உயர்த்தி பிடிக்க வேண்டும்? சாதிய படங்களுடன் இணைந்து என்னால் பயணிக்க முடியவில்லை. 90 சதவீதம் பேர் சாதியை மறந்து ஒன்றாக வாழ முன்வந்துவிட்டார்கள். இதை நாம் கொண்டாட வேண்டும். சாதி மறுப்பை படமாக எடுத்து மக்களுக்கு சொல்ல வேண்டும். தேவர் மகன், கவுண்டர் வீட்டு பொண்ணு படம் வந்த காலம் வேற இப்போ இருக்க காலம் வேற, அந்த காலத்தில் சாதி அதிகமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது.
இதை பற்றி பேசுங்கள். ஐ.டியில் ஆயிரக்கணக்கான பேர் ஒன்றாக அமர்ந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் யாருமே சாதி பார்க்கவில்லை. அவர்களுக்கான உலகத்தை உருவாக்கி வருகிறார்கள். தனக்கு பிடித்திருந்தால் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று தனஞ்சேயன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.