நடிகர் திலகம் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன் தனது வாழ்நாளில் கடைசி கட்டத்தில் உருக்கமாக பேசிய வார்த்தைகள் குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவாஜி கணேசன், முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியதோடு, பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்த சிவாஜி கணேசன் பல வரலாற்று படங்களில் நடித்துள்ளார். மேலும் க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்த சிவாஜி ஒரு கட்டத்திற்கு மேல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் இவர் நடித்த ஜல்லிக்கட்டு, தேவர் மகன், படையப்பா, பூப்பரிக்க வருகிறோம், ஒன்ஸ்மோர் உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. தன் வாழ்நாளின் கடைசிவரை நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசன், தயாரிப்பாளர் இயக்குனர் கலைப்புலி எஸ் தாணு மீது மிகுந்த அன்பு வைத்திருந்துள்ளார். அவரை அன்புடன் புலி என்று அழைக்கும் சிவாஜி ஒருமுறை தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக தாணுவை அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று தாணு அங்கு சென்றபோது, நான் பசியோடு இருக்கிறேன் என்ன இப்படி லேட்டா வர சாப்பிடு சாப்பிடு என்று அன்போது கூறிய சிவாஜி சாப்பிட்டு முடித்தவுடன், புலி என்ன இருந்தாலும் மனது சரி சாதாரணம் இல்லை. என் பேத்தியை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குயா. (அப்போது அவரது பேத்தியின் கணவர் சுதாகர் சிறையில் இருந்துள்ளார்.) என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் இப்படி கஷ்டத்துடன் நான் எதுக்குயா வாழனும்? எங்க அண்ணன் (எம்.ஜி.ஆர்) நல்ல பேரோடு போய்விட்டார். பேர் புகழ் செல்வம் செல்வாக்கோடு போய்விட்டார். நான்தான்யா பஸ் மிஸ் பண்ணிட்டேன் மனசு கஷ்டமா இருக்கு புலி சரி நீ போய்ட்டு வா என்று தாணுவை அனுப்பிவைத்த சிவாஜி கணேசன், அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மரணமடைந்துள்ளார். இந்த தகவலை கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“