சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதித்த மிக முக்கிய நடிகர்களில் ரஜினிகாந்துக்கு தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த இவர், பைரவி என்ற படத்தின் மூலம் தனி ஹிரோவாக உருவெடுத்தார். அதன்பிறகு தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிய ரஜினிகாந்த் இன்றும் இளம் நடிகர்களுக்கு நிகராக தனது ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் நாயகனாக உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவருக்கு வில்லனாக பல நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க நடிகர் சத்யராஜ். ஒரு துணை நடிகரான தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சத்யராஜ் பல படங்களில் வில்லனாக நடித்து பின்னர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யராஜ் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனால் இன்று அவரின் சினிமா வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அவர் வில்லனாக நடித்த பல படங்களே பலருக்கும் நினைவுக்கு வருகிறது. அந்தவகையில் ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பரத் படத்தில் அவரின் அப்பாவாக வில்லன் ரோலில் சத்யராஜ் மிரட்டி இருப்பார்.
1986-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், அம்பிகா, ரகுவரன், விசு வடிவுக்கரசி, கவுண்டமணி, எஸ்வி சேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியில் சஷி கபூர், அமிதாப் பச்சன், சஞ்சய் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரிசூல் என்ற படத்தின் ரீமேக்.
இந்த படத்தில் ரஜினிக்கு இணையாகவும், சில காட்சிகளில் அவரையே டாமினேட் செய்யும் வகையிலும் சத்யராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார். படத்தை எடுத்துவிட்டு போட்டு பார்க்கும்போது ரஜினிகாந்தை விட சத்யராஜூவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த படத்தின் பெரிய வெற்றிப்பாடலான என்னம்மா கண்ணு பாடலில் சத்யராஜ் தான் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பார். இதை பார்த்த ரஜினிகாந்த் ஒரு சீன் கூட கட் பண்ண வேண்டாம். சத்யராஜூவுக்கு என்ன இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
திரைத்துறையில் சத்யராஜூவுக்கும் ரஜினிகாந்துக்கும் மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக ரஜினிகாந்துக்கு எதிராக சத்யராஜ் பலமுறை எதிர் கருத்து பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு முதலில் சத்யராஜூவை தான் அனுகியதாகவும் அவர் நடிக்கவில்லை என்பதால் தான் அடுத்து சுமன் நடித்தார் என்று கூறப்படும் நிலையில், தற்போது இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“