சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பிரபலமான தெருக்குரல் அறிவு தனது காதலியை அறிமுகம் செய்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான ராப் பாடகராக உருவெடுத்துள்ளவர் தெருக்குரல் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை தனது பாடல் மூலம் வெளிக்கொண்டு வரும் இவர், தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். அரக்கோணத்தை சேர்ந்த இவர் சிறுவயது முதலே நாட்டுப்புற பாடல்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இந்த ஆர்வம் அவரை இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் இடம்பெற்ற உரிமை மீட்போம் என்ற பாடலின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். சந்தோஷ் நாராயனண் இசையில் வெளியாக இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, வட சென்னை, தேசிய விருது பெற்ற சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், பாடல் பாடுவது எழுதுவதோடு மட்டுமல்லாமல் இன்டிபெண்டன்ட் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இதில் இவர் பாடிய எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு தனது காதலியை வலைதளங்களின் மூலம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், தனக்கும் மார்கழி மக்கள் இசை குழுவின் ஒருங்கிணைப்பாளரான கல்பனா என்பவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறி என் திமிரான தமிழச்சி என்று என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், கூறப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இசைவாணியின் நெருங்கிய தோழிதான் கல்பனா என்பதும் அவர் பெரியார்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil