காமெடி படங்களை இயக்கதில் வல்லவரான கல்யாண் மற்றும் காமெடி கிங் சந்தானம் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் "80's பில்டப்" மக்களிடையே பில்டப்பை ஏற்படுத்தியதா? என்பதை காணலாம்.
கதைக்களம் :
எப்போதுமே சந்தானமும் அவரின் தங்கையும் எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சந்தானத்தின் தாத்தா இறந்து விடுகிறார். சாவு வீட்டுக்கு வரும் உறவினர் பெண்ணான நாயகியை (ராதிகா ப்ரீத்தி) பார்த்ததும் சந்தானம் காதலில் விழுகிறார். இதற்கு அவரது தங்கை எதிர்ப்பு தெரிவிக்க, இறந்த தாத்தாவிற்கான காரியங்கள் முடிப்பதற்குள் ராதிகாவை கரெக்ட் செய்வேன் என தங்கையிடம் சவால் விடுகிறார் சந்தானம். இந்தச் சவாலில் யார் ஜெயித்தது என்பதே மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
80's கதாநாயகன் எப்படி இருப்பாரோ அதுபோலவே நடை, உடை, தோற்றம், வசன உச்சரிப்பு என அனைத்திலுமே வித்தியாசம் காட்டியிருக்கிறார் சந்தானம். அவரது Body Language பல இடங்களில் சிரிப்பையும் சில இடங்களில் வெறுப்பையும் கொடுத்து இருக்கிறது. சீரியலில் பிரபலமாகி இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி நடிப்பு குறிப்பிடும்படி அமைந்திருக்கிறது.
சந்தானத்தின் நண்பர்களாக வரும் தங்கதுரை, மைக்கேல் உள்ளிட்டோரின் கதாபாத்திரம் படத்திற்கு சுமை. மேலும் மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், மனோபாலா, ஆனந்தராஜ் போன்றோரும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள். எமனாக வரும் கே.எஸ். ரவிக்குமார், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் காமெடிகள் சற்று ஆறுதல்.
படம் எப்படி :
அண்ணன் தங்கை இடையில் நடக்கும் மோதல்தான் இப்படத்தின் ஒரு வரி கதை என்று சொல்லும் போதே இப்படத்தின் திரைக்கதை எவ்வளவு சுவாரசியமாக இயக்குனர் அமைத்திருக்க வேண்டும், ஆனால் இயக்குனர் அதை தவறி விட்டாரோ என்ற எண்ணம் ரசிகர்களுக்குள் எழுகிறது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஆங்காங்கே சந்தானத்தின் காமெடிகளும் மற்ற காமெடிகளும் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும் அந்த எண்ணிக்கையிலான காமெடிகள் கூட ரசிகர்களுக்கு எடுபடவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.
ஆனந்தராஜன் லேடி கெட்ப் தேவையில்லாத ஆணி. மேலும் சந்தானம் கேங், கே.எஸ்.ரவிக்குமார் கேங், மன்சூர் அலிகான் கேங் என படம் இடையில் திசை மாறி போவதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. துளியும் சுவாரசியமில்லாத திரைக்கதை மற்றும் ஆங்காங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்கள் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. குழந்தைகளால் அதிகமாக விரும்பப்படும் சந்தானம் போன்ற நடிகர்கள் இதுபோன்ற வசனங்களை தன் படத்தில் வைக்கலாமா ? என்ற கோபமும் எழுகிறது.
காமெடி படங்களில் லாஜிக் எதிர்பார்க்க கூடாது என்றாலும் இவ்வளவு பெரிய லாஜிக் ஓட்டைகளை தவிர்த்திருக்கலாம். டிமொத்தத்தில் சிறப்பான திரைக்கதை இல்லாமல் வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், காமெடிகளையும் வைத்து ரசிகர்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்து இயக்குனர்களும் நடிகர்களும் மாற வேண்டும். அடுத்த படத்திலாவது ஒரு நல்ல கம் பேக் கொடுங்க பாஸ்!
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“