தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பாடகி ஜானகியுடன் ஒரு பாடும்போது செய்த சேட்டைகள் குறித்து பேசியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.
பாடகராக முத்திரை பதித்திருந்த எஸ்.பி.பி, நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவர் நடித்த பல படங்களில் இவரின் நகைச்சுவை திறன் வெளிப்பட்டிருக்கும். அந்த வகையில் பாடகி எஸ்.ஜானகியுடன் இணைந்து ஒரு பாடல் பாடும்போது அவரிடம் எஸ்.பி.பி குறும்பு செய்ய, அவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1987-ம் ஆண்டு ஏ.ஜெகன்நாதன் இயக்கத்தில் வெளியான படம் காதல் பரிசு. கமல்ஹாசன், சகோதரிகளான ராதா அம்பிகா இருவரும் இணைந்து நடித்த இந்த படத்தில், ஜெய்சங்கர், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு வைரமுத்து, கங்கை அமரன், புலமைபித்தன் உள்ளிட்ட பலர் பாடல்கள் எழுதியிருந்தனர். அதிலும் குறிப்பாக வைரமுத்து எழுதிய ‘’ஹே உன்னைத்தானே’’ என்ற பாடல் இன்றும் ஒரு பிரபலமான பாடலாக இருக்கிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன் – எஸ்.ஜானகி இணைந்து பாடிய இந்த பாடல் பதிவு நடைபெறும்போது, ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக பாடல் பதிவின்போது, ஜானகி தனது கையில் ஒரு கர்சிப் வைத்துக்கொண்டு அதை அசைத்துக்கொண்டே பாடல் பாடுவார். இந்த பாடல் பதிவில், டேக் என்று சொல்லும்போது, எஸ்.பி.பி திடீரென ஜானகியின் கையில் இருந்து கர்சிப்பை பிடிங்கியுள்ளார். ஆனால் ஜானகி இதை பார்த்து கோபப்படவில்லை.
மாறாக ராஜா இந்த பையனுக்கு நான் நல்லா பாடல் பாடுவது பிடிக்கவில்லை போல ரொம்ப டிஸ்டர்ப் பண்றான் என்று கூறியுள்ளார். இதை கேட்ட, இளையராஜா என்னடா பண்ற சேட்டை எல்லாம், டேய் பாட்டு முடிச்சிட்டு போலாம்டா என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் பதிவு முடிந்து படம் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“