தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன் படத்திற்கு இசையமைக்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதன், சிவாஜி நடிக்கும்போது எப்படி நடிப்பார் என்பதை முன்கூட்டியே கணித்துவிடுவார் என்று இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.
இசை உலகில் ரீ-ரெக்கார்டிங் என்ற வார்த்தையை முதலில் கொண்டு வந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இரட்டையர்கள் தான். எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் இவர்களிடம் உதவியாளராக இருந்து இசை உலகில் பல வித்தியாசமான பாடல்களை கொடுத்தவர்கள் தான் சங்கர் கணேஷ் என்ற இரட்டையர்கள். எம்.எஸ்.வி போல் பல முன்னணி நடிகர்களுக்கு தங்கள் இசை மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த இவர்கள், விஜயகாந்தின் ஆரம்ப கால படங்களில் இசையில் பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர். தற்போது சங்கர் இல்லாத நிலையில், கணேஷ் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.
அதே சமயம் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் கணேஷ், சமீபத்திய பேட்டியில் சினிமா இசை குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதில், இசையை யாரும் திருட முடியாது. காற்றில் இசை இருக்கிறது. அதை காதால் கேட்டு கையால் வாசிக்கிறோம். அவ்வளவு தான். அதேபோல் ஒரே ராகத்தை பாடல் முழுவதும் பயன்படுத்தினால் அது க்ளாசிக் பாடலாக இருக்கும். கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் ஆகியோர் இந்த முறையில் தான் பாடல்களை கொடுத்தார்கள்.
இதில் இருந்து மாறுபட்டவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். நான் அவரிடம் உதவியாளராக இருக்கும்போது சிவாஜி படங்களுக்கு இசையமைத்தால், அவர் எப்படி நடிப்பார் என்று கற்பனை செய்துகொண்டால் இசையமைப்பது ஈஸி என்று கூறியுள்ளார். அது எப்படி என்று கேட்டால், சிவாஜி இப்படிதான் செய்வார் என்று இசையமைக்கும் முன் நடித்து காட்டுவார். அதை பார்த்துவிட்டு இசையமைத்தால், படம் வெளியாகும்போது எம்.எஸ்.வி செய்தது போலவே சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
நடிகர்கள் திரையில் எப்படி நடிப்பார்கள் என்று கற்பனை செய்துகொண்டே அவர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் தான் எம்.எஸ்.வி. இதனால்தான் அவர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தவிர்க்க முடியாத இசையமைப்பாரளாக திகழ்ந்தார் என்று சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“