தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி முதலில் தனிப்பாட்டு பாட அவ்வளவு கஷ்டப்பட்டு சான்ஸ் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா பாடல்களில் உச்சஸ்தாயி குரலுக்குப் பெயர் பெற்றவர் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. மேலும் பக்தி பாடல்கள் மூலமும் தமிழகத்தில் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்தநிலையில், எல்.ஆர்.ஈஸ்வரி தான் முதல் பாடல் பாட எவ்வளவு கஷ்டப்பட்டேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பாடகர் மனோ உடனான உரையாடலின்போது தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார். நான் நல்ல படிப்பேன், ஆனால் வசதி இல்லாததால் படிக்க முடியவில்லை. பின்னர் மனோகரா படத்தில் கஷ்டப்பட்டு சான்ஸ் பிடித்து கோரஸ் பாட சேர்ந்தேன். அப்புறம் 5-6 வருடங்கள் கோரஸ் பாடினேன். அப்ப யாரும் எனக்கு தனியாக பாட சான்ஸ் கொடுக்கல. அதற்காக ஏங்கினேன். அப்ப கோரஸ் பாடும்போது, முதலில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாடச் சொல்வார்கள். அதைக்கேட்டு, யாராவது தனி பாட்டு கொடுப்பாங்களா என காத்திருத்தேன்.
ஒரு படத்திற்காக கோரஸ் பாட போனபோது, ஒவ்வொருவரையும் தனியாக பாட வைத்தார்கள். என்னையும் பாட வைப்பார்களா என காத்திருந்தேன். ஆனால், என்னை திட்டி வெளியே அனுப்பினாங்க. எங்கம்மா அதே பாடலுக்கு கோரஸ் பாடிட்டு வெளியே வந்து என்னை ஆறுதல் படுத்தினாங்க. அப்ப நான் ஒரு பெரிய பாடகியா வருவேனு சவால் விடுத்தேன்.
அப்புறம் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கோரஸ் பாடினேன். பின்னர் எனக்கு தனிப்பாட்டு பாட சான்ஸ் கிடைத்தது. ஆரம்பத்தில் கட்டிக்க நல்ல தாவணி பாவாடை, சேலை இல்லாமல் கஷ்டப்பட்டேன். இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“