தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல் பாடகர் மற்றும் பாடகிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவர்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் பாடகர் மற்றும் பாடகிகளின் குரலில் வெளியான ஹிட் பாடல்கள் என்ற பெயரில் ஆடியோ கேசட், சிடி வெளியாகி இருந்தது.
அதே சமயம் தற்போது யூடியூப்பில் பாடகர் மற்றும் பாடகிகளின் தொகுப்பு வெளியாகி வருகிறது. தற்போதைய டிஜிட்டல் காலக்கடத்தில் சமூக வலைதளங்களில் மூலம் பிரலமாகி பல பாடகர் மற்றும் பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் 80-90 களில் வெளியான பாடல்களுக்கு இப்போதும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த ஹிட் பாடல்களுக்கு குரல் கொடுத்த பாடகர் மற்றும் பாடகிகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது தனது குரல் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்திருப்பவர் பாடகி பி.எஸ்.சசிரேகா. 1973-ம் ஆண்டு தமிழில் வெளியான பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடலை பாடி திரையுலகில் தனது இசை பயணத்தை தொடங்கிய பி.எஸ்.சசிரேகா தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்றால் அவர் இளைராஜாவிடம் கூடாரத்திற்கு வராமல் இருக்க முடியாது. அந்த வகையில், ஜி.கே.வெங்கடஷ் இசையில் பொண்ணுக்கு தங்கமனசு படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சசிரேகா ஒரு ஓடை நதியாகியது என்ற படத்தில் இடம் பெற்ற தென்றல் என்னை முத்தமிட்டது என்ற பாடல் மூலம் இளையராஜா இசையில் பாடினார்.
முன்னணி பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் இளையராஜாவின் இசையில் பலநூறு பாடல்களை பாடியிருந்தாலும் சசிரேகாவுக்கு அந்தமாதிரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜா இசையில், அலைகள் ஓய்வதில்லை படத்தில் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ என்ற பாடலை பாடிய சசிரேகா, கோபுரங்கள் சாய்பதில்லை படத்தில் என்புருஷன்தான் எனக்கு மட்டும் தான், ராஜபார்வை படத்தில் விழி ஓரத்து கனவு, உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ள சசிரேகாவுக்கு இளையராஜா அதிகம் வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆனால் இவரின் திறனை அறிந்து அதிகமான வாய்ப்பு கொடுத்தவர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மனோஜ்கியான். விஜயகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஊமைவிழிகள் படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு என்ற இரு பாடல்களை பாடியிருந்தார். அதேபோல் செந்தூரபூவே படத்தில் இடம்பெற்ற செந்தூரபூவே இங்கு தேன் சிந்த’ பாடல் இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல் லிஸ்டில் உள்ளது.
அதேபோல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான உயிருள்ளவரை உஷா படத்தில் ‘இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாலோ’, உறவை காத்த கிளி படத்தில் ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’.. ஒரு தாயின் சபதம் படத்தில் ‘சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது’ என ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிழக்கு சீமையிலே படத்தில் மாணுத்து மந்தையிலே பாடல் பாடியவர் சசிரேகாதான்.
தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் எங்கு திருவிழா அல்லது திருமணம் காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு மாணுத்து மந்தையிலே பாடல் ஒலிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 3 தலைமுறை தாண்டியும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தாலும், பாடலை பாடியவர் பி.எஸ்.சசிரேகா என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”