பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரின் சென்னை இல்லத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர் வாணி ஜெயராம். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பலவற்றில் பாடல் பாடி தனது குரலால் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்த வாணி ஜெயராம், சிறந்த பாடகி என்ற அடிப்படையில் 3 முறை தேசிய விருதை வென்றுள்ளார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், தற்போது உலகளவில் பிரபலமான பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வாணி ஜெயராம் இன்று மரணமடைந்தார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம், தலையில் காயத்துடன் வீட்டில் மரணமடைந்து கிடந்ததாக கூறப்படும் நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வாணி ஜெயராம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாணி ஜெயராம் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டு பணிப்பெண் காலை 10.30 மணியளவில் வந்து கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை என்றும், இதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஆழ்வார்பேட்டியில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் எடுத்து வந்த மாற்றுச்சாவி மூலம் கதவு திறக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு உள்ளே சென்ற காவல்துறையினர் பார்த்தபோது, ரத்த காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேதா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil