தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை சொல்லும் படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பது பாசமலர். சிவாஜி சாவித்ரி ஜெமினி கணேசன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்தில் புதிய மேல்நாட்டு முறையை அறிமுகப்படுத்தியிருப்பார் சிவாஜி கணேசன்.
Advertisment
சிவாஜி கணேசன் நடிப்பில் ‘’ப’’ வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் பீம்சிங். இவரது இயக்கத்தில், 1961-ம் ஆண்டு வெளியான படம் தான் பாசமலர். ஏ.பி.கொட்டாரக்கரா என்பவர் கதை எழுதிய இந்த படத்தில், சிவாஜி கணேசன்,சாவித்ரி அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர். மேலும் ஜெமினி கணேசன்,கே.ஏ.தங்கவேலு,நம்பியார்,எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த இந்த படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படங்கள் அதிகம் வருகிறது என்றால் அதற்கு முன்னோடி இந்த பாசமலர் தான்.
இந்த படத்தில் ஒரு புதிய முறை நடிப்பை மேல்நாட்டு பாணியில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். பொதுவாக நடிப்பில் வசனங்களை மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பது, வசனத்தை மனப்பாடம் செய்யாமல், அந்த காட்சியில் இருக்கும் கேரக்டர் பேசுவதற்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்துவது என நடிப்பில் பல வகை உண்டு. ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிர்கள் பலரும் பெரிதாக வசனங்களை மனப்பாடம் செய்யாமல் படப்பிடிப்பு தளத்தில் கேரக்டர்களை மெருகேற்றுவார்கள்.
இதே முறையை தான் சிவாஜி கணேசன் பாசமலர் படத்தில் கையாண்டிருப்பார். குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் கட்சியில் அந்த ராஜசேகர் கேரக்டராகவே சிவாஜி வாழ்ந்திருப்பார். அதேபோல் பணக்காரனாக மாறியதை தொடர்ந்து மலர்ந்தும் மலராத பாடல் காட்சிகளிலும் வித்தியாசமான அதே சமயம் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கி அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருப்பார்.
தனனைச்சுற்றி யார் இருந்தாலும், தங்கையை மட்டுமே தனது உலகமாக நினைத்து அவளுக்காகவே வாழ்ந்து வரும் கேரக்டர் தான் ராஜசேகரன். தான் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தனது தங்கை ஒருவரின் நலனுக்காவே இருக்க வேண்டும் என்று நினைப்பதும், தங்கைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளையே தள்ளி வைக்கும் இந்த கேரக்டரை தமிழ் சினிமா இன்றுவரை கண்டதில்லை. இந்த படம் சிவாஜி கணேசனின் நடிப்பை உலகதரத்திற்கு கொண்டு சென்றது என்று நல்ல சினிமா யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.