/indian-express-tamil/media/media_files/2025/08/25/thuppakki-vijay-2025-08-25-15-59-11.jpg)
கோட் படத்தில் விஜயுடன் நடித்த சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், இது குறித்து மதராஸி பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ள இவர், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்கார் என 3 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கன்ன நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் தரும் வகையில் பேசினார். அமரன் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது, அப்போது வெங்கட் பிரபு விஜயின் கோட் படத்தை இயக்கி வந்த நிலையில், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் என்ட்ரி இருந்தது.
தீவிரவாதியான மோகனை கைது செய்யும் விஜய், கிரிக்கெட் ஸ்டேடியத்தில், அவரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு செல்வார். இந்த படம் வெளியாகி சில மாதங்களில் விஜய் தனது கடைசி படத்தை அறிவித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், விஜய் இடத்தில் இனி சிவகார்த்திகேயன் தான். இவர் தான் திடீர் தளபதி, விஜய் ரசிகர்களை கவர் செய்ய நினைக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதராஸி ஆடியோ விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், மற்ற நடிகர்களின் ரசிகர்களை அவ்வளவு எளிதாக நம் பக்கம் திருப்பிவிட முடியாது. விஜய் சார் அரசியலுக்கு சென்றாலும், அஜித் சார் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், கமல் சார் வெற்றி தோல்விகளை தாண்டி வந்தாலும், ரஜினி சார் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆனாலும், அவர்களுக்கான ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். ஒரு படம் நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்திருக்கிறது. என்றால் அதை பாராட்டுவேன். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?
கோட் படத்திற்கு பிறகு, நிறைய பேர் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி விஜய் சார் ரசிகர்களை கவர நினைக்கிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். நான் அவ்வாறு நினைக்கும் ஆள் என்று அவர் நினைத்திருந்தால் இதை செய்திருக்கவே மாட்டார். என்றைக்குமே அண்ணன் அண்ணன் தான் தம்பி தம்பி தான் இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியுள்ளார். மதராஸி படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.