/indian-express-tamil/media/media_files/2025/06/07/1QDJ1FEUmPYcqKgRbLK6.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில், டி.ராஜேந்தர் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது,
தமிழ் திரையுலகின் இருபெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைவராலும் "டி.ஆர்." என்று அன்புடன் அழைக்கப்படும் பன்முக கலைஞர் டி. ரா ஜேந்தர், இருவரும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்களின் நட்புறவு குறித்து திரையுலக வட்டாரங்களில் பல கதைகள் உண்டு.
அதே சமயம், இந்த இரு ஜாம்பவான்களும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்து வந்தது. தற்போது இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், ரஜினிகாந்தின் அடுத்த படமான 'கூலி' படத்தில் டி. ராஜேந்தர் ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்திருப்பதாக வெளிவந்துள்ளன. இந்தச் செய்தி தமிழ் திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப் படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'கூலி'. இந்தப் படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கூலி உருவாகி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த பாடலுக்கான ப்ரோமோ படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த செய்தியை மேலும் உற்சாகப்படுத்துவது என்னவென்றால், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு டி. ராஜேந்தர் தனது தனித்துவமான குரலை வழங்கியுள்ளார் என்பது தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது, இது ரஜினிகாந்த் படத்திற்கு டி. ராஜேந்தரின் முதல் பங்களிப்பாகும். இது உண்மையிலேயே ஒரு சிறப்பு மிக்க கூட்டணியாக அமைகிறது.
ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடலில் டி. ராஜேந்தரின் சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான குரலைக் கேட்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடல் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் துடிப்பான இசையும், டி. ராஜேந்தரின் தனிப்பட்ட பாடும் பாணியும் இணைந்து, ரஜினிகாந்தின் திரைக்கு அப்பாலான பிரம்மாண்டத்தை கொண்டாடும் ஒரு தனித்துவமான பாடலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.