சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் பட்ஜெட் 3 மடங்கு அதிகம் என்றும் இது நடிகர் சூர்யாவுக்கே தெரியாது என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியாக எதற்கும் துணிந்தவன், படத்தை தொடர்ந்து விக்ரம், ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யா தற்போது தனது 42-வது படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார்.
பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மற்றும் மெட்ராஸ் போன்ற படங்களைத் தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யா 42 படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த, ஞானவேல் கூறுகையில், வரவிருக்கும் சூர்யா 42 படம் சூர்யாவின் கேரியரில் மிக பிரம்மாண்ட படமாக இருக்கும். இது அவரது மிகப்பெரிய திரைப்படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறியுள்ளார்.
மேலும்“இயக்குநர் படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்ததும், நான் சாதாரணப் படத்தைத் தயாரிக்கவில்லை என்பது புரிந்தது. இந்தப் படம் இதுவரை சூர்யாவின் மிகப் பெரிய படமான பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட் என்பது சூர்யா சாருக்கு கூட தெரியாது. ஏனென்றால் அவர் பீதி அடைவார். ரிஸ்க் எடுப்பதிலும் தயாரிப்பாளரை பாதிப்பதிலும் கவனமாக இருப்பார்.
குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் கூடுதல் கவனமாக இருக்கிறார். அதனால், அவரிடம் இருந்து பட்ஜெட்டை மறைத்து விட்டோம். இருப்பினும், செட்டைப் பார்த்ததிலிருந்து அவருக்குத் தெரியும். காட்சி ரீதியாக நாம் பெரிய காரியத்தைச் செய்ய உள்ளோம் என்பதை அவர் புரிந்துகொண்டார். தயாரிப்பாளர்களுக்கு பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் ஆர்வத்தை கொடுத்த எஸ்.எஸ்.ராமௌலிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
புஷ்பாவோ, சூர்யாவோ 42 ஆகட்டும் அல்லது இங்கிருந்து வரும் எந்தப் படமாகட்டும், மும்பையில் வெற்றி பெற்றால் அதற்கு ராஜமௌலி சார்தான் காரணம். அவர் பாகுபலியைப் போல் ஒரு படத்தை கொடுக்கவில்லை என்றால், மும்பையில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. சூர்யா 42 படத்தின் பெரிய பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி. அவர் ஜன்னலைத் திறக்காமல் இருந்திருந்தால், நாங்கள் அதைச் செய்ய முடியாது.
சூர்யா 42 படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், படத்தின் டீஸர் மற்றும் வெளியீட்டு தேதி மே மாதம் வெளியாகும் என்றும் ஞானவேல் தெரிவித்தார். இந்த படத்தில் சூர்யாவைத் தவிர, பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/