வயநாடு நிலச்சரிவு சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்த படக்குழு, அதற்கு ஆகும் செலவை வயநாடு நிவாரண நிதியாக கேரளா முதல்வருக்கு வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தங்கலான். கர்நாடகாவின் கே.ஜி.எஃப் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில், பசுபதி, மாளவிகா மோகன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஆங்கில நடிகர் டேனியல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. நாயகன் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவியாக மோகன், ஆங்கில நடிகர் டேனியல் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாளவிகா மோகன், எல்லோரும் எப்படி இருக்கீங்க, தங்கலான் டிரெய்லர் நல்லா இருந்துச்சா என்று தமிழில் பேசி அசத்திய நிலையில், நடிகை பார்வதி, தங்கலான் போன்ற ஒரு படத்தை நீங்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று கூறியுள்ளார். அதேபோல், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாடி மகிழ்ந்த நடிகர் டேனியல், தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் மாதிரியான படங்களை தில் வேண்டும். பா.ரஞ்சித்துக்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தங்கலான் படக்குழு தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு நிவாரணமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் விக்ரம் நிதியுதவி அளித்திருந்த நிலையில், தற்போது வயநாடு பகுதியில் நடக்க இருந்த தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்த படக்குழுவினர், இந்த நிகழ்ச்சிக்காக ஆகும் செலவான ரூ5 லட்சத்தை வயநாடு நிவாரண பணிக்காக, கேரளா முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. படக்குழுவின் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“