/indian-express-tamil/media/media_files/2025/04/26/ciFFc2LlO4tmugSvP08B.jpg)
எம்புரான் திரைப்படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியாக இந்தியா முழுவதும் பட்டையை கிளப்பிய தொடரும் திரைப்படம், ஒடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,
மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு பல சிறப்பான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால் நடித்த 'தொடரும்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, 'தொடரும்' திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் ரூ100 கோடி வசூல் செய்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற புதிய வரலாறு படைத்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக, இதன் ஓடிடி வெளியீடு தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியான 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
தற்போது, 'தொடரும்' படத்தின் அபாரமான திரையரங்க வசூல் காரணமாக இந்த படத்தின் ஒடிடி ரிலீஸ் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது 'தொடரும்' திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே 30-ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தொடரும் திரைப்படம் வெளிகாக உள்ளது.
இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ்ஆபீஸில் வரவேற்பைப் பெற்ற 'தொடரும்', வசூல் ரீதியாகவும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இப்படம் கேரளாவில் மட்டும் முதல் நாளில் ரூ5 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் வசூலை அதிகரித்து, தற்போது வெளியான ஒரு மாதத்தில் ரூ116 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், கேரள மாநிலத்தில் ரூ100 கோடி வசூலைத் தாண்டிய முதல் மலையாளத் திரைப்படம் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கேரளாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் 'தொடரும்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் இப்படம் உலக அளவில் ரூ232.25 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' ரூ242 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்திலும், மோகன்லாலின் முந்தைய படமான 'எல்2 எம்புரான்' ரூ265 கோடி வசூலுடன் முதலிடத்திலும் உள்ளன.
'தொடரும்' திரைப்படத்தின் இந்த அபாரமான வெற்றி, மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தையும், மலையாளத் திரைப்படங்களின் உலகளாவிய சந்தையையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.