தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம் என்று கூறிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக ரசிகர்கள் பலரும் ஒசூரில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், 37 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்துள்ள படம் தக் லைப். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தெனாலி படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் 19-வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 5-ந் தேதி தக் லைப் படம் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில், நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பேசியது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னடம் தமிழில் இருந்து பிரிந்த மொழி என்று கமல்ஹாசன் சொல்ல, அதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை எழுப்பி தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தக் லைப் படத்திற்காக ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்த்தால், கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே "தக் லைப்" படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகாததால், பெங்களூரில் இருந்து ரசிகர்கள் பலரும், கர்நாடக – தமிழ்நாடு எல்லையான ஒசூரில் தக் லைப் படத்திற்காக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். ஒசூரின் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியாகும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றமும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு ஜூன் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தற்போது தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாவில்லை.