5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வரும் வாரிசு படம் தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 11) வெளியானது. விஜய் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு குடும்ப உறவுகளை மையமாக கொண்ட கதையில் நடித்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நேற்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் வாரிசு படம் வெளியான அதே நாளில் சினிமாவில் விஜயின் போட்டி நடிகரான அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை தொற்றிக்கொண்டிருந்த நிலையில், நேற்று படம் வெளியாகும் சமயத்தில் துணிவு படத்திற்கு மட்டும் நள்ளிரவு 1 மணிக்கு திரையிட அனுமதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே துணிவு படம் வெளியாகிவிட்டதால், சமூகவலைதளங்களில் துணிவு தொடர்பான பாசிட்டீவ் விமர்சனங்கள் குவிந்தது வாரிசு படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனாலும் படம் வெளியான மறுநாளான இன்று, காலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் வாரிசு படத்திற்கு ஆதரவாக பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தளபதி விஜய், வாரிசு பொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர் வாரிசு 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுகிறது என்பது போன்ற ஹேஷ்டேக்குகள் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதில் வாரிசு படத்தில் விஜய் பேசும், 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுகிறது என்ற வசனத்தின் ஹேஷ்டேக்கில் 36 ஆயிரம் ட்விட்கள் பதிவாகியுள்ளது. வாரிசு படத்திற்கு முன்பாக துணிவு படத்திற்கு திரையிட்ட அப்படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீதான கோபத்தை தான் அஜித் ரசிகர்கள் இவ்வாறு வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”