மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'படை தலைவன்' இயக்குனர் யூ. அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அடர்ந்த வனப் பகுதிகள், காட்டு யானைகள் மற்றும் அங்கு வாழும் மக்களின் தனித்துவமான வாழ்வியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, யதார்த்தமும், உணர்வுபூர்வமான காட்சிகளும் நிறைந்த ஒரு த்ரில்லர் படமாக 'படை தலைவன்' உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு வெளியாகாத நிலையில், தற்போது வரும் ஜூன் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "உலகளாவிய காட்சி விருந்து ஜூன் 13 அன்று வருகிறது...!" என்று படக்குழு சண்முக பாண்டியன் இடம்பெற்ற புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
'படை தலைவன்' திரைப்படத்தின் திரைக்கதை முழுவதும் காடுகளிலேயே நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தனித்துவமான அம்சம் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.
சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 'மதுர வீரன்' படத்திற்கு பிறகு, சண்முக பாண்டியன் 'படை தலைவன்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில், தைரியமான புதிய தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில், யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், கருணாஸ், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி, மற்றும் லோகு என்.பி.கே.எஸ் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு நடிகரின் பங்களிப்பும், படத்தின் விரிவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கதைக்களத்திற்கு வலு சேர்க்கிறது. இந்த படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம், மறைந்த நடிகர் விஜயகாந்தின் தோற்றம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இப்படத்தில் இடம்பெற உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசை, 'படை தலைவன்' படத்திற்கு மேலும் ஒரு பலம். அவரது ஆன்மாவைத் தொடும் இசை, கதையின் உணர்வுபூர்வமான ஆழத்தையும், கலாச்சாரப் பிணைப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வலுவான கதைக்களம், தனித்துவமான வன பின்னணி மற்றும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன், 'படை தலைவன்' தமிழ் சினிமாவுக்கு ஒரு மறக்க முடியாத படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.