/indian-express-tamil/media/media_files/2024/11/23/0RJV2W8ZcAinZa0rXxGm.jpg)
தமிழ் சினிமாவில், பாடல் எழுதுவதில் இரு துருவங்களாக இருந்தாலும், பெரிய ஹிட் பாடல்களை கொடுத்து கண்ணதாசன் – வாலி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டு வியந்த கண்ணதாசன், கடைசியாக எனக்கு ஒரு இரங்கல் கவிதை எழுத முடியுமா என்று கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.
அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, 1968-ல் கண் மலர் என்ற படத்திற்காக ஓதுவார் என்ற பாடலை எழுதியுள்ளார், இந்த படத்தை பட்டு இயக்கியிருந்தார். வி.கே.ராமசாமி தயாரித்த இந்த படத்தை எடுத்தவரை, எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கண்ணதாசன் உள்ளிட்ட சிலரிடம் படத்தை போட்டு காட்டியுள்ளனர்.
அப்போது இந்த படத்தில் சரோஜா தேவி பாடும் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் என்ற பாடலை கேட்ட கண்ணதாசன், இது என்ன தேவராமா? திருவாசகமா என்று கேட்க, இது நம்ம வாலி எழுதிய பாடல் என்று கூறியுள்ளார் வி.கே.ராமசாமி. அப்போதே வாலிக்கு போன் செய்த கண்ணதாசன், உனக்கு பிடித்த பாட்டில், ஒன்று என் டிரைவரிடம கொடுத்து அனுப்பி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடலை பற்றி பேசிய கண்ணதாசன், நான் எதோ தேவாரம் திருவாசனம் என்று நினைத்தேன். இது நீ எழுதிய பாடலாமே என்று சொல்லிவிட்டு நான் இறந்தால் நீதான் பாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் கண்ணதாசன் இறந்து 3-வது நாள் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய வாலி, எழுத படிக்க தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன் அழகிய கவிதை புத்தகத்தை கழித்து போட்டுவிட்டான் என்று கவிதை பாடியுள்ளார். இதை வாலியே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். தொழில்முறையில், இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், கண்ணதாசன் – வாலி இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.