கவியரசர் கண்ணதாசன் – சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் இடையே கருத்து மோதல்கள் இருந்தாலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
தமிழ் திரையுலகில் எழுத்தாளர், இயக்குனர், சிறுகதை மன்னன் என பல திறமைகளை உள்ளடக்கியவர் ஜெயகாந்தன். கவியரசர் கண்ணதாசனுக்கும் இவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்தாலும், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் இந்த கருத்து மோதல்கள் அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கமான நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி ஒருமுறை தனது நண்பர்களுடன் கண்ணதாசன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, தனது உதவியாளரிடம் நாளைக்கு ஜெயாவை பார்க்க வேண்டும் ஞாபகப்படுத்து என்று கூறியுள்ளார். மேலும், நேற்றே ஜெயாவை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை என்று சொல்ல கண்ணதாசனுக்கு தெரியாமல் அந்த காரில் வந்த அவரின் மகன் காந்தி கண்ணதாசன், யாருப்பா அது ஜெயா என்று கேட்டுள்ளார்.
அவரின் கேள்வியை கேட்டு திரும்பிய கண்ணதாசன், நீயும் இந்த காரில் தான் இருக்கிறாயா? நல்ல வேளை இப்போதே கேட்டியே, ஜெயா என்ற ஒருவரை பார்க்க அப்பா துடியாய் துடிக்கிறார் என்று உன் அம்மாவிடம் சொல்லாமல் விட்டியோ அதுவரைக்கும் சந்தோஷம். ஜெயா என்பவர் ஜெயகாந்தன் என்று கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார். இப்படி இருக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடப்பது வழக்கமாக இருந்துள்ளது.
அந்த காலக்கட்டத்தில் கண்ணதாசன் தான் நடத்திய ஒரு பத்திரிக்கையில் சிறுகதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் ‘’சினிமாவுக்கு போன சித்தாள்’’ என்ற பெயரில் ஒரு சிறுகதையை எழுதினார் ஜெயகாந்தன். அதன்பிறகு இருவரும் இணைந்து ஒரு படம் எடுக்கலாம் என்று யோசித்து கண்ணதாசன் தயாரிக்க, ஜெயகாந்தன் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் தான் சமூகத்தில் 4 பேர்.
3 ஆயிரம் அடிக்கு மேல் படமாக்கப்பட்ட இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. அதன்பிறகு ஜெயகாந்தன் கண்ணதாசன் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு தகவல். அதே சமயம் 1965-ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை இயக்கிய ஜெயகாந்தன், நாகேஷ் நடிப்பில் யாருக்காக அழுதான் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“