நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகர் ஹீரோ என முன்னேற்றமாகி பின்னாளில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் துணை நடிகராக இருந்தபோதும் பல சிக்கல்களையும் தடைகளையும் கடந்து ஹீரோவான எம்.ஜி.ஆர் பின்னாளில் தமிழ் சினிமாவை தன் கைக்குள் கட்டி வைத்திருந்தார்.
இத்தனை சிறப்புகள் இருந்தாலும், எம்.ஜி.ஆருக்கு எதிராக பல சதிவேலைகளும் நடந்துள்ளது. சினிமாவில் ஆக்டீவாக இருந்த எம்.ஜி.ஆர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய கொள்ளைகே கடவுள் மறுப்பு தான். ஆனாலும் எம்.ஜி.ஆர் கடவுள் பக்தியுடன் இருந்தார். இதனால் வாரந்தோறும் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது அவரது வழக்கம்.
எம்.ஜி.ஆர் போலவே சிவாஜியும் தி.மு.கவின் முக்கிய பொறுப்பாளராக இருந்தபோது ஒருமுறை அவர் திருப்பதி சென்றுவந்துள்ளார். அன்றில் இருந்து கட்சியில் அவரை பிடிக்காத சிலர், கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் கட்சியில் இருந்துகொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார் சிவாஜி. அவர் கட்சியின் கொள்கைகளை மீறிவிட்டார் என்று கூறி அவருக்கு எதிரான சதி வேலைகளை செய்ததால் சிவாஜி கட்சியில் இருந்தே விலகிவிட்டார்.
அதேபோல் கட்சி தலைவர் அண்ணாவிற்கு அடுத்து எம்.ஜி.ஆர் தான் என்ற நிலை இருந்தபோது, அவரை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சியாக எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் அவர் கோவிலுக்கு செல்வதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் பணத்தோட்டம் என்ற படம் தயாராக முயற்சிகள் நடந்து வருகிறது.
கே.சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்காக முதற்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுத வரவழைக்கப்பட்டார். அப்போது படத்தில் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல் செய்யும் தவறுகள் நாயகன் மீது பழி விழுகிறது. ஊரே அவரை கெட்டவன் என்று சொல்ல, அவரது காதலியும் அம்மாவும் நம்புகின்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்களுமே நாயகன் தான் தவறு செய்திருப்பார் என்று நம்புகிறார்கள். இந்த சூழ்நிலையில் நாயகன் பாடுவது போல் ஒரு பாடல் வேண்டும் என்று சொல்ல கண்ணதாசன் எழுத தயாராகிறார். அப்போது அருகில் எம்.ஜி.ஆர் சோகத்தில் அமர்ந்திருக்க அவரிம் விசாரிக்கிறார் கண்ணதாசன். அப்போது எம்.ஜி.ஆர் கட்சியில் தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளை குறித்து சொல்கிறார்.
மேலும் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும் இந்த படத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவும் ஒரு பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் எம்.ஜி.ஆர் கேட்க, இந்த விமர்சனங்களுக்கு உங்களுத பதில் என்ன என்று கண்ணதாசன் கேட்கிறார். எனக்கு இதை பற்றி கவலை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று எம்.ஜி.ஆர் சொல்கிறார். அப்போது 2 சூழ்நிலைக்கும் தகுந்தவாறு கண்ணதாசன் ஒரு பாடலை கொடுக்கிறார்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே என்று எழுதப்பட்ட அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர் பற்றி குறை சொன்ன அனைவருக்கும் செவிட்டில் அறைந்தார் போல் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“