திரைப்படங்களில் அரசியல் குறித்த எந்த வசனங்கள் பாடல்கள் என எதுவுமே வரக்கூடாது என்று சென்சார்போடு கடுமையாக இருந்த காலக்கட்டத்தில் தனது வித்தியாசமான பாடல் மூலம் அரசியல் கொடி ஏற்றி சென்சார் அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவியுள்ளார் கவியரசர் கண்ணதாசன்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு அரசியல் கட்சி தொடங்கினால், அதனை பிரபலபடுத்த பல வழிகள் இருக்கிறது. ஆனால் 1950- காலக்கட்டங்களில், இன்றைய காலத்தில் இருப்பது போன்ற வசதிகள் இல்லை. செய்தித்தாள்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் கட்சியில் பெயரை நிலைநாட்டும் அளவுக்கு தான் இருந்தது. அதே சமயம் திரைப்படங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்கள் இடம்பெற சென்சார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
அந்த காலக்கட்டத்தில் பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை புதிதாக தொடங்குகிறார். அதே காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பணம் என்ற படத்தை எடுக்க முயற்சிக்கிறார். நடிகர் திகலம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான 2-வது படமாக பணம் படத்திற்கு கருணாநிதி திரைக்கதை எழுதிய நிலையில், என்.எஸ்.கிருஷ்ணன் பத்தை இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்தில் தீனா மூனா கானா என்ற ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த படம் அரசியல் பேசும் படமாக இல்லை என்றாலும், படத்தில் திருக்குறள் முன்னணி கழகம் என்ற அமைப்பை படத்தில் காட்டியிருப்பார்கள். இதை வைத்து தான் தீனா மூனா கானா என்று பாடல் எழுதப்பட்டுள்ளது. அடிப்படையில் இது திராவிட முன்னேற்ற கழகத்தை குறிக்கும் என்பதற்கு இந்த பாடலில் பல உதாரணங்கள் இருக்கிறது.
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் பெரியார் என்று எழுதிய கண்ணதாசன், அடுத்த வார்த்தையை வள்ளுவ பெரியார் என்று மாற்றியிருப்பார். திராவிட கழகத்தை தொடங்கிய பெரியார் திராவிட முன்னேற்ற கழகம் உருவாக காரணமாக இருந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமைந்திருக்கும். அதேபோல் பாடலின் இறுதியில் தம்பிமார்களுக்கு ஒரு அண்ணா போலே என்று இழுத்து பாடுவார். அதன் மூலம் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய அண்ணாவின் பெயர் வந்திருக்கும்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலில், திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்தையும் மக்களுக்கு மமறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தை இயக்கின என்.எஸ்.கிருஷ்ணன் தான் இந்த பாடலையும் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தி.மு.க குறித்து மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்தது. அதே சமயம் சென்சார் அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவியிருப்பார்.