தமிழ் சினிமாவில் வாழ்க்கையின் தத்துவத்தை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர் கவியரசர் கண்ணதாசன். சோகம், ஏமாற்றம், காதல், அன்பு உள்ளிட்ட அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், ஒரு தயாரிப்பாளராகவும், கதாசிரியராகவும் தன்னை நிரூபித்தவர்.
அதேபோல், இயக்குனர் ஆக வேண்டும் என்று முடிவு செய்த கண்ணதாசன், அந்த காலத்தில் காமெடியில் கலக்கிய சந்திரபாபுவை வைத்து கவலை இல்லாத மனிதன் என்ற படத்தை இயக்கியிருந்தார். பொதுவாக படப்பிடிப்புக்கு சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்று பரவலமாக பேசப்பட்ட காலத்தில் கண்ணதாசன் படத்திலும் அதே வேலையை செய்துள்ளார்.
படம் முழுவதும் நடித்து முடித்துவிட்டு க்ளைமேக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் க்ளைமேக்ஸ் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்த சந்திரபாபுவை கண்ணதாசன் நேரில் சந்தித்தபோது கூட அவர் தனது வீட்டின் பின் கேட் வழியாக ஓடிவிட்டார். அதன்பிறகு பலகட்ட போராட்டத்திற்கு பின் படப்பிடிப்பை முடித்துள்ளார் கண்ணதாசன்.
ஆனால் படம் வெளியான படு தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்த கண்ணதாசன் சந்திரபாபுவை திட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். இந்த கவிதையை கண்ட சந்திரபாபு ஒரு கடிதத்தின் மூலம் கண்ணதாசனுக்கு பதில் கொடுத்துள்ளார். அந்த நடிதத்தில், ”கண்ணதாசன் என்னை மிகச்சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார். நான் அப்படி மிகச்சிறந்த நடிகராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் எப்படி அவரின் படத்திற்கு கதாநாயகனாக என்னை தேர்வு செய்திருக்க முடியும்.
மேலும் அழகிய தமிழ் மொழியினை என்னை இவ்வாறு திட்டுவதற்கே பயன்படுத்தியுள்ளார். படத்தில் நடிக்க கூடுதல் சம்பளம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை எனவும் தான் பின் கேட் வழியாக சென்றதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் எவ்வளவு நாள் வாழ போகிறோமோ தெரியாது. ஆனால் நான் இறந்துவிட்டால் என்னை வாழ்த்தி இரு வரிகளாவது பாடல்களை எழுதுங்கள்” என அக்கடிதத்திற்கு விடை கொடுத்துள்ளார்.
இவரின் வார்த்தைகளை கேட்கும் யார் மீது தவறு என்று கூற முடியவில்லை என்றாலும், சந்திரபாபு தனது தவறை உணர்ந்து பேசியுள்ளார் என்று தெரிகிறது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“