இன்றைய சினிமாவில் பாடகர்களுக்கு நிகராக இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களே பாடல்களை பாடிவிடுகின்றனர். இதனால் பாடகர்கள் என்ற ஒரு துறை சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் தான் பாடிய ஒரு பாடலை படத்தில் சேர்க்காமல், தனியாக அந்த பாடலை பாடகரை வைத்து பதிவு செய்து படத்தில் சேர்த்துள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
Advertisment
பொதுவாக சினிமாவில் 2 வகை பாடல்கள் உண்டு. ஒன்று, திரையில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் வாயசனைத்து நடனமாடி பாடும் பாடல். மற்றொரு அசரீரி பாடல் என்று சொல்வார்கள். திரையில் நடிகர்கள் வாயசைக்காமல் இருப்பார்கள் ஆனால் பேக்ட்ராப்பில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். பழைய க்ளாசிக் படங்களில் இந்த மாதிரியான பாடல்கள் அதிகம் இருக்கும். இப்படி வந்த பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளன.
அந்த வகையில் கௌரவம் படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. 1973-ம் ஆண்டு வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் கௌரவம். சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், பண்டரி பாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் வரும் நீயும், நானுமா கண்ணா, பாலூட்டி வளர்த்த கிளி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் பாலூட்டி வளர்த்த கிளி பாடல், அசரீரி பாடலாக படமாக்க முடிவு செய்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக இந்த பாடலில் சிவாஜி வாயசைக்கமாட்டார் என்பதால் எம்.எஸ்.விஸ்வநாதனே இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு செய்து படப்பிடிப்புக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பாடலை கேட்ட சிவாஜி கணேசனுக்கு, பாடல் மிகவும் பிடித்துவிட, நடிக்கும்போது ஆர்வமிகுமியில் வாயசைத்து நடித்துள்ளார். படக்குழுவினர் கேட்டபோது, எம்.எஸ்.வி குரல் நன்றாக இருக்கிறது. இதை இப்படியோ படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால் படத்தின் ரீ-ரிக்கார்டிங் நடக்கும்போது, சிவாஜி இந்த பாடலுக்கு வாயசைத்ததை கேட்ட, எம்.எஸ்.வி படக்குழுவினரிடம் விசாரித்துபோது, சிவாஜி உங்கள் குரலில் இருக்கும் பாடலை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாக கூறியுள்ளனர்.
இதை கேட்ட எம்.எஸ்.வி, இது அசரீரி பாடல் என்பதால் நான் பாடினேன். சிவாஜி வாயசைத்தால் அவருக்கு என் குரல் பொருத்தமாக இருக்காது என்று கூறி டி.எம்.எஸ்.-ஐ அழைத்து இந்த பாடலை மீண்டும் பதிவு செய்துள்ளார். படக்குழுவினர் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எம்.எஸ்.வி கேட்காததால், அந்த பாடல் பதிவின்போது படக்குழுவினர் யாரும் அங்கு வரவில்லை. பாடலை முடித்த எம்.எஸ்.வி, அதை ரீ-ரிக்கார்டிங்கில் சேர்த்த படக்குழுவினருக்கு காட்டியுள்ளார்.
முன்பு இருந்ததை விட, பல மடங்கு பாடல் நன்றாக வந்திருந்தது. சிவாஜியின் நடிப்புக்கு ஏற்றபடி டி.ம்.எஸ்.அந்த பாடலை சிறப்பாக பாடியிருந்தார். இந்த படம் வெற்றி பெற இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் கௌரவம் படம் சிவாஜி கணேசனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“