லட்சுமி நாராயணா – நமோ நமஹ
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாக ஒளிப்பரப்பாகி வரும் லட்சுமி நாராயணா – நமோ நமஹ என்ற ஆன்மீகப் புராண தொடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வார எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சமுத்திரராஜன் லட்சுமியிடம் “ நாராயணரை மறந்துவிட்டு நான் அழைத்து வந்துள்ள பாதாளராஜனை மணந்து கொள் “ என்று மிரடுகிறான். லட்சுமி இக்கட்டான நிலையில் நாராயணர் வந்து காப்பாற்றுவார் என்று காத்திருக்கிறார். அந்த சமயத்தில் பாதாளராஜன் லட்சுமியை அடைய முயற்சி மேற்கொள்கிறான். அப்போது லட்சுமி ஆவேசம் கொண்டு பாதாளராஜனை தாக்கி விட்டு தப்பிக்கிறார்.
பாதாளராஜன் வேறுவேறு யுக்திகளில் லட்சிமியை நெருங்க முயன்று கொண்டிருக்கிறான். அதற்கு சமுத்திரராஜனும் அவரது மனைவி ஜலராணியும் உதவுகிறார்கள். அதேநேரம் சமுத்திரராஜனிடமிருந்து லட்சுமியை காப்பாற்ற நாராயணர் பாற்கடலை கடைய முடிவு செய்கிறார். பாற்கடலை தன்னிடம் இருக்கும் இந்திரன் முதலான தேவர்களை வைத்துக் கொண்டு கடைவதென்பது இயலாத காரியம் என்பதனை நாராயணர் உணர்கிறார்.
உடனே பாற்கடலை கடைய அசுரமாதா திதியின் உதவியை நாடுகிறார். நிறைய நிபந்தனைக்கு பின்பு அசுரமாதா தன் அசுரமகன்களுடன் வருவதற்கு சம்மதிக்கிறாள். முதலில் பாற்கடலை கடைய மத்தாக பர்வதமலையை பெயர்த்து வரவேண்டும். அசுரர்களும் தேவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பர்வதமலையை பெயர்க்க முயற்சி செய்கின்றனர். பர்வதமலையை நாராயணர் உதவியில்லாமல் நகர்த்தக்கூட முடியவில்லை. நாராயணர் நேரடியாக களத்தில் இறங்கி பர்வதமலையை பெயர்க்கிறார்.
இந்த மலையை கருடன் உதவியுடன் சமுத்திரத்திற்கு எடுத்து வருகிறார். சிவனின் உதவியுடன் வாசுகி பாம்பை மத்தாக வரவழைக்கிறார். தேவர்களும் அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடைய ஆரம்பிக்கின்றனர். இதனை அறிந்த லட்சுமி மகிழ்ச்சி கொள்கிறார். சமுத்திரராஜனோ லட்சுமியிடம் “ நாராயணர் என்னிடம் தோற்றுப் போவார் “ என சபதம் செய்கிறான். மேலும் பாற்கடலை கடைவது தடுத்து நிறுத்தப்படனும் என்று முடிவு செய்கிறான்.
தன்னுடைய அபார வலிமையால் சமுத்திரத்தை அசைத்து இடைஞ்சல் செய்கிறான். இதனால் பாற்கடலை கடைவதற்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனை அறிந்த நாராயணர் கூர்ம அவதாரம் எடுத்து நீருக்குள் சென்று பர்வதமலையை தாங்கிப் பிடிக்கிறார். அப்படி பாற்கடல் கடையப்படும்போது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றிப் பரவுகிறது. ஆலகாலவிஷத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் நாராயணர் உட்பட தேவர்களும் மக்களும் பாதிப்படைகின்றனர். உடனே சிவன் இதனை தன் ஞானதிருஷ்டியால் அறிந்து நாராயணருக்கு உதவ முன்வருகிறார். நேரடியாக சமுத்திரத்திற்கு வந்து பாற்கடல் கடையும்போது தோன்றிய ஆலகாலவிஷத்தை தானே எடுத்துப் பருகிறார்.
அதேவேளை சமுத்திரராஜனிடமிருந்து லட்சுமி புறப்படுகிறார். சமுத்திரராஜன் லட்சுமியை தடுக்கும் பொருட்டு தன் கழுத்தில் கத்தியை வைத்து தான் சாகப்போவதாகவும் “ தந்தையை கொன்ற பாவம் லட்சுமியை சேரட்டும் “ என்று மிரட்டுகிறான். சமுத்திரராஜன் மனைவி ஜலதேவி முயன்று லட்சுமியை விடுவிக்கிறாள். லட்சுமியும் நாராயணரை வந்தடைகிறார். நாராயணர் சமுத்திரராஜனிடம் லட்சுமியை மறுபடியும் திருமணம் செய்து கொள்ள கன்னிகாதானம் கோருகிறார்.
சமுத்திரராஜன் வேறுவழியில்லாமல் சம்மதிக்கிறான். அதேநேரம் நாராயணரை பழிவாங்க சமுத்திரராஜன் லட்சுமியின் நிழலை வைத்து அலட்சுமியை உருவாக்குகிறான். அலட்சுமி செழிப்புக்கு எதிராக தரித்திரத்தின் அடையாளமாக விஸ்வரூபம் எடுக்கிறாள். நாராயணரும் லட்சுமியும் அலட்சுமியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அடுத்து என்ன நடந்த்து என்பதை இந்த வார எபிசோட்டில் காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.