/indian-express-tamil/media/media_files/2025/09/05/good-bad-ugly-sog-2025-09-05-18-50-10.jpg)
அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்பத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனாலும் வசூலில் அந்த படம் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.
அஜித்தின் பழைய படங்களின் காட்சிகளை தொடர்புபடுத்தி திரைப்பதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தன்னிடம் உரிய அனுமதி பெறாமல், தன்னுடைய பாடல்களை 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார். இதில், அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதால், தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அதே சமயம், இப்பாடல்கள் இருக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே அவற்றை பயன்படுத்தியதாக 'குட் பேட் அக்லி' திரைப்படக் குழுவினர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. இதனிடையே இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்தது அஜித் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதே சமயம், கங்கை அமரனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவரது மகன் பிரேம்ஜி அமரன் "காப்புரிமை விவகாரம் தொடர்பாக தன்னுடைய அண்ணனுக்கு, எனது தந்தை ஆதரவு அளித்துள்ளார். இதுவே என்னுடைய சகோதரர் குறித்து யாராவது பேசினால், அவருக்கு உறுதுணையாக நான் நிற்பேன். அந்த வகையில் தான் என் தந்தை பேசியிருந்தார். 'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறி விட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அப்படம் வெற்றி பெற்றது என்று பிரேம்ஜி கூறியிருந்தார்.
இதனிடையே, குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தியது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்துள்ளார். அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக, ரூ5 கோடி நஷ்டஈடு கேட்டு இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் அளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் உரிய அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம் என்று கூறியதாகவும், ஆனால் உரிமையாளர் யார் என்பதை குறிப்பிடவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.