தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-ஐ விட விஜயகாந்த் ஒருபடி மேல் என்று நடிகர் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த 1991-ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. தொடர்ந்து, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே, வீரம் விளைந்த மண், கும்மிப்பாட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதில் 2002-ம் ஆண்டு இவர் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனது மகன் தனுஷை நாயகனாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் தனுஷ் முக்கியமான நடிராக வலம் வருகிறார். மேலும் என் ஆசை ராசாவே படத்தின் மூலம் சிவாஜியை இயக்கிய கஸ்தூரி ராஜா, விரம் வௌஞ்ச மண் படத்தில் விஜயகாந்தை இயக்கினார்.
இவரது இயக்கத்தில் அடுத்து காசு பணம் துட்டு என்ற படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜா எம்.ஜி.ஆர் விஜயகாந்த் இருவரையும் ஒப்பிட்டு பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர் அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் விஜயகாந்த் எம்.ஜிஆர்-க்கு சமமாக அள்ளிக்கொடுத்திருந்தாலும் ரியல் வாழ்க்கையில் அவர் எம்.ஜி.ஆர்-க்கு ஒருபடி மேல் என்று கஸ்தூரி ராஜா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் 2 படங்கள் இயக்கியவுடன் விஜயகாந்துக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் கதை சொல்ல போனபோது நண்பர்களுடன் சீட் விளையாடிக்கொண்டிருந்தார்.
அவருக்கு முதலில் நண்பர்கள்தான் குடும்பம் குழந்தைகள் மனைவி என அனைத்துமே நண்பர்களுக்கு அடுத்துதான். அப்போது அவரிடம் கதை சொன்னேன். கேட்டுவிட்டு நான் சொல்லி அனுப்புகிறேன் என்று சொன்னார். கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டது. நான் படம் பண்ணுவதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களிடம் பாதி கதைதான் சொன்னேன். அந்த கதையை அவர்கள் விஜயகாந்திடம் சொல்ல சொல்லி என்னை அனுப்பினார்கள். அப்போது என்னை பார்த்த விஜயகாந்த் வாங்க கிருஷ்ணமூர்த்தி என்று என்னை சரியாக அடையாளம் கண்டுபிடித்தார்.
விசு சார் இயக்கத்தில் அவர் நடிக்கும்போது நான் உதவி இயக்குனர் என் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதை சரியாக ஞாபகம் வைத்திருந்தார். அவரிடம் கதை சொல்ல தொடங்கியபோது கதை வேண்டாம் என்று சொன்னார். ஆனால் என்னுடன் வந்த விஜயகாந்த் நண்பர் ஒருவர் அவர் பாதி கதைதான் சொன்னார். மீதிக்கதை உங்களிடம் சொல்லும்போது கேட்கலாம் என்று நினைத்தேன் என்று சொன்னார்கள்.
அதன்பிறகு எனக்காக வேண்டாம் இவர்களுக்காக கதை சொல்லுங்கள் என்று சொன்னார். அப்போதும் பாதி கதைதான் சொன்னேன். விஜயகாந்த் போதும் என்று சொன்ன விஜயகாந்த், 7 வருடத்திற்கு முன்பே இந்த கதையை கேட்டுவிட்டேன் என்று சொன்னார். நான் சினிமாவில் பார்த்த ஒரே ஒரு மனிதன் என்றால் அது விஜயகாந்த் தான். எம்.ஜி.ஆரை விட இவர் ஒருபடி மேல். எம்.ஜி.ஆர். யார் தோள் மீதும் கை போட மாட்டார். ஆனால் விஜயகாந்த் அனைவர் மீதும் கைபோடுவார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“