ஒரு பெரிய கமர்ஷியல் கதைக்கு தாயரா இருங்க ஹீரோவை நான் கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாக தங்கலான் திரைப்படத்திற்காக நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நட்சத்திர இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கிய இவர், அடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினிகாந்த் நடிப்பில், கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இவர், அடுத்து விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் தயாராகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில், சாதனை படைத்து வருமு் நிலையில், தங்கலான் படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், தயாரிப்பாளர் ஞானவேல் மாதிரியான மனிதரை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என் சினிமா பயணம் கடினமாக இருந்திருக்கும்.
என் முதல் படமான அட்டக்கத்தி படத்தில் அவ்வளவு பிரச்சனை இருந்தது. படத்தை பார்த்தவர்கள் படம் சரியில்லை என்று சொன்னார்கள். ஞானவேல் படத்தை பார்த்துவிட்டு இதை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு அடுத்தடுத்து அவரது நிறுவனத்திற்காக சைன் செய்தேன். தங்கலான் படத்திற்கும் பல பிரச்சனைகள் இருந்தது. ஆனால் ஞானவேல் ராஜா மீது எனக்கு சந்தேகமே வரவில்லை.
இன்று காலை கூட போன் செய்து ஒரு பெரிய பட்ஜெட்டில் கமர்ஷியல் படத்திற்கு தயாராக இருங்கள். பெரிய ஹீரோவை நான் கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று சொன்னார். விக்ரம் சார் ஏன் இவ்வளவு நம்புனார்னு எனக்கு தெரியல. அதுதான் என் பயமே. 58 வயதில் பல இயக்குனர்களிடம் பணியாற்றிவிட்டு, இவ்வளவு ரசிகர்களை வைத்துக்கொண்டு ஏன் இப்படி உழைக்கணும்னு நினைச்சேன். இதை அவரிடம் கேள்வியாக கேட்டேன்.
அப்போது தான் தெரிந்தது ஆர்ட் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் தீராத லவ்தான். அவர் கடந்து வந்த பாதையில் இருக்கும் வெட்கையை தீர்ப்பதற்காக ஓடுகிறார். என் லைப்பில் இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிட்ட பணியாற்றியது பெரிய சவாலாக இருந்தது. எனது அடுத்த படத்தில் பிரமிக்கக்கூடிய இன்னும் கனெக்ட் ஆகக்கூடிய சினிமாவை கொடுப்பேன் என்று உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“