தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தனது மகனின் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் செயல்பட்டு வருவதாகவும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன்பே, அவரது அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய செல்வராகவன், அடுத்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, என்.ஜி.கே, உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், நெஞ்சம் மறப்பதில்லை, தனுஷ் நடிப்பில், நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலணி 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேபோல் சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக செல்வராகவன், அடுத்து பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்க வாசல் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் செல்வராகவன், அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிந்துள்ள செல்வராகவன், இது என் மகனின் போலியான அக்கவுண்ட் இது குறித்து ரிப்போர்ட் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.