எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைச்செல்வி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வரும் நிலையில், அவர் சீரியலில் இருந்து விலக போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக வருகிறார். இதில் கடந்த சில வாரங்களாக தர்ஷினி கடத்தல் தொடர்பான எபிசோடுகள் அரங்கேறி வருகிறது. தற்போது குழந்தை கடத்தல் தொடர்பான எபிசோடுகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் அண்ணன்களுக்கு ஆதரவாக அண்ணிகளை கொடுமைபடுத்தும நாத்தனார் ஆதிரைச்செல்வி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சத்யா தேவராஜன். அதே சமயம் அண்ணன்கள் வலுக்கட்டாயமாக தன்னை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்ததால் அண்ணிகளுக்கு ஆதரவாக செயல்படும் இவர் தற்போது தனது வாழக்கைக்காக போராடி வருகிறார். ஆதிரைச்செல்வி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். சன்டிவியின் அருவி சீரியலில் நடித்த இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சத்யா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் .
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலத்தில் பல ப்ராஜக்ட்டுகள் செய்ய எனக்கு விருப்பம் இருக்கிறது. அதற்காக என்னிடம் கதை சொன்னவர்கள், கதை வைத்திருப்பவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக போகிறீர்களா என்று கேட்க, அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். புதிய ப்ரஜக்ட்டுகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“