கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் – ரேகா நடிப்பில் வெளியான ஒரு படத்திற்காக பாடல் பாட வந்த இந்தி பாடகி ஒருவரை தனது பாடல் மற்றும் இசையின் மூலம் அழ வைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
Advertisment
தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர், இசையமைப்பாளர், பாடல் எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் கங்கை அமரன். இவர் ராமராஜன் நடிப்பில் இயக்கிய கரகாட்டக்காரன் படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு படமாக உள்ளது. அதேபோல் கரகாட்டக்காரன் படம் மட்டுமல்லாமல், ராமராஜன் – கங்கை அமரன் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில், கரகாட்டக்கரான் படத்திற்கு முன்னதாக ராமராஜன் – கங்கை அமரன் கூட்டணியில் வெளியான படம் எங்க ஊரு பாட்டுக்காரன். ரேகா, நிஷாந்தினி, செந்தாமரை, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக செண்பகமே செண்பகமே என்ற பாடல் பலரின் கவனத்தை ஈர்த்த பாடலாக உள்ளது.
இந்த பாடல் முதலில், ஆண், அதன்பிறகு டூயட்டில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து பாடுவது போலரும், 3-வது ஒரு பெண் கணவன் தன்னிடம் பேசுவதில்லை என்ற ஏக்கத்தில் சோகமாக பாடுவது என 3 முறை இடம் பெற்றிருக்கும். இதில் ஆண் பாடுவதற்கு பாடகர் மனோ, டூயட் பாடலை மனோ மற்றும் சுசிலா இணைந்து பாடியிருப்பார்கள். 3-வது ஒரு பெண் சோகத்தில் பாடும் அந்த பாடருக்கு இந்தி பாடகர் ஆஷா போஸ்லே வரவழைக்கப்பட்டுள்ளார்.
முதல் 2 பாடல்களிலும் வரிகளை மாற்றாத கங்கை அமரன், இந்த சோக பாடலுக்காக ஒரு சில திருத்தங்களை செய்து ஆஷா போஸ்லோவுக்கு பாட பயிற்சி கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வராததால், இந்தி தெரிந்த இளையராவின் உதவியாளர் ஒருவர் அவருக்கு இந்தியில் பாடலை சொல்லிக்கொடுத்து அதன்பிறகு பாட வைத்துள்ளார் பாடலும் சிறப்பாக வந்துள்ளது.
பொதுவாக பாடகர்கள் பாடலை பாடி முடித்துவிட்டு தங்களது சம்பளத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிடும் நிலையில், ஆஷா போஸ்லே மட்டுமு் இந்த பாடலை மிக்ஸிங் செய்யுங்கள் நான் கேட்டுவிட்டு தான் செல்வேன் என்று கூறி இளையராஜாவின் அருகிலேயே அமர்ந்துள்ளார். சிறிது சேரத்தில் இளையராஜா பாடலை மிக்ஸிங் செய்து அவருக்கு பாட்டை போட்டு காட்டியுள்ளார். பாடலை கேட்ட ஆஷா போஸ்லே ஒரு பெண்ணின் ஏக்கத்தை உணர்ந்து பாடியதை நினைத்து அழுதுகொண்டே சென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“