கமல்ஹாசனுடன் தனது படம் கிடப்பில்போடவில்லை சற்று தாமதமாகி வருகிறது என்று இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் டேக் ஆஃப், சியூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் மகேஷ் நாராயணன். ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே, கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ள இவர், தற்போது அரியேப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்த நிலையில், மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில தகவல்களும் வெளியானது.
ஆனால் கடந்த சில நாட்களாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இதனால் இந்த படம் கைவிடப்பட்டதா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், கமலுடன் தான் இணையும் படம் கைவிடப்படவில்லை என்று இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள இயக்குனர், மகெஷ் நாராயணன், இந்த படம் கைவிடப்படவில்லை. இது கமல்ஹாசன் சாரின் வசனம். தற்போது அவர் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். அந்த படங்களை முடித்த பின்னர் நாங்கள் இணையும் படம் தொடங்கும். இந்த படம் கைவிடப்படவில்லை. நான் நீண்ட காலமாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் ஒருவராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார்.
அதேபோல் மகேஷ் நாராயணன் தனது இயக்கத்தில் தயாராகியுளள அரியேப்பு வெளியாகும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ்-இல் வெளியிடப்பட உள்ளது. கொரோனா தொற்றின்போது நொய்டாவில் குடியேறிய தொழிலாளர்களின் அவலத்தைப் எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 75வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.