கர்நாடக ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா
தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர்கள் முக்கியமானவர் நடிகர் சூர்யா. தெலுங்கு மலையாளம் கன்னடம் என இவரது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டு வசூலை குவித்து வருகிறது. தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் வாடிவாசல், பாலா இயக்கத்தில் வணங்கான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா கர்நாடக ரசிகர்களை சந்தித்துள்ளார்.
மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக பெங்களூரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு நடிகர் சூர்யா மற்றும் சிரஞ்சீவி இருவரும் ஆம்புலன்ஸ் வழங்கினர். அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஒ நட்சத்திர ஹோட்டலில் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் வித்தியாசமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது, அதே கண்கள் படத்தின் இயக்குனர் இயக்கும் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்தாக இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விக்ரம் அடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான ஜெய்பீம்
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம். இருளர் இன மக்களில் வாழ்வில் நடந்த உண்மை சமபவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.
இதனிடையே அடுத்த மாதம் கோவாவில் தொடங்க உள்ள 53-வது இந்தய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 25 இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம், கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், வெங்கட் இயக்கிய கிடா என 3 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது.
தள்ளிப்போகும் தனுஷின் வாத்தி?
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அல்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வாத்தி. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் தெலுங்கில் சார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கல்வியை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 2-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சில தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாத்தி படத்தில் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil