பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது என்பது குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1000 வருடங்களுக்கு முன்பு சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் கல்கி எழுத்திய பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1950-களில் வெளியான இந்த நாவலை திரைப்படமாக மாற்ற எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் முயன்று தோல்வியை சந்தித்தனர்.
தற்போது இந்த முயற்சியை வெற்றியாக மாற்றியுள்ள இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களா இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலிலும், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் பச்சன், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய தோட்டா தரணி கலைப்பணிகளை செய்துள்ளார்.
Success beyond boundaries!
— Lyca Productions (@LycaProductions) October 7, 2022
Thank you for this tremendous response ❤️ 🔥#PS1 #PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XMdztUnkGc
மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளில் ரூ80 கோடி வசூலித்துள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதுவே தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு கிடைத்த அதிகபட்ச முதல்நாள் வசூல் என்று விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், 3 நாட்களில் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் ஆறு நாட்களில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் இன்று உலகளவில் ரூ300 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil