மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்திய பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் உள்ளிட் மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் என இரண்டு படங்கள் வெளியானாலும் பொன்னியின் செல்வன் தற்போதும் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சிஇஓ சுபாஸ்கரன் ஆகியோர் இணைந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் ராஜேந்திரனை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை அறக்கட்டளையின் மேலாளர் சீதா ரவி முன்னிலையில் வழங்கினர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. 5 மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“