தனது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் தி லெஜெண்ட் படம் இன்று வெளியாகியுள்ளது. விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பு ஒரு ஹீரோவாக அவருக்கு கிடைத்துள்ளதா?
ஒரு விஞ்ஞானியாக இருக்கும் சரவணன் தனது படிப்பும் அறிவும் தனது நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு இவருக்கு தொல்லை கொடுப்பதற்காவும், இவர் மக்களுக்கு சேவை செய்வதை எதிர்ப்பதற்காகவும் வில்லன் கோஷ்டி வேலை செய்கிறது. இதை சரவணன் எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் தான் நினைத்ததை செய்து முடித்தாரா?இல்லையா? என்பதை சொல்வது தான் தி லெஜெண்ட்.
விளம்பர படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துவிட்ட அருள் சரவணன் இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியான உடனே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை தி லெஜெண்ட் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அருள் சரவணன் நடிப்பில் வெளியான முதல் முழு நீள படம் என்பதை அவரின் நடிப்பே காட்டிக்கொடுத்துவிடுகிறது. பல இடங்களில் நடிப்பில் சற்று சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் இவருக்கு இன்னும் பயிற்சி வேண்டும். அதே போல் பல இடங்களில் ரஜினியின் பாணியை கையில் எடுத்துள்ளார்.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு தன்னை அறியாமல் ரஜினி ஸ்டைல் தன்னிடம் வந்துவிடுகிறது என்று கூறி இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். நாயகியாக ஊர்வசி ரௌத்வாலா கீர்த்திகா திவாரி இருவரும் கொடுத்த கேரக்டரை செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு லட்சுமி ராய் யாஷிகா ஆனந்த் வந்துவிட்டு செல்கின்றனர்.
அதேபோல் விவேக், யோகி பாபு, சிங்கம்புலி, மயில்சாமி, ரோபோ சங்கர் என காமெடி பட்டாளம் இருந்தாலும் படத்தில் காமெடிக்கு பெரும் பஞ்சம் தான். சரவணனின் பெற்றோராக விஜயகுமார் லதா, மூத்த அண்ணனா பிரபு, பேராசிரியராக நாசர், உள்ளிட்ட தேர்ந்த நடிகர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் கேரக்டருக்கு அழுத்தம் கொடுக்காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். நாயகனின் குடும்பத்தில் உள்ள அனைவருமே எப்போதும் நாயகனின் புகழ்பாடும் காட்சிகள் பல உள்ளன.
வில்லன்களாக வரும் சுமன், வம்சி கிருஷ்ணா, ஹரிஷ் பேரடி ஆகியோர் எம்.ஜி.ஆர் காலத்து வில்லன்களை கண்முன் நிறுத்தியுள்ளனர். முதலில் ஹீரோவை இவர்கள் வீழ்த்துவதும், பிறகு எழுந்து நின்று ஹீரோ இவர்களுக்கு பதிலடி கொடுப்பதும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அடித்து துவைத்த கதையில் யாருக்குமே அழுத்தமான கேரக்டர் இல்லை என்பது சோதனை.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் விட்டதை பிடித்துள்ளார். இந்த ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது வேல்ராஜின் ஒளிப்பதிவு. கிராமத்து கட்சிகளை கண்களுக்கு இதமாக கொடுத்துள்ளார். படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்றதுபோல் காட்சிளை பிரம்மாண்டாக பதிவு செய்துள்ளார்.
நட்சத்திர பட்டாளங்கள், மூத்த நடிகர்கள், நாயகிகள், என பிரம்மாண்ட படமாக எடுக்கும் முயற்சியில் கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த லெஜெண்ட் கண்டிப்பாக சாதனையாக மாறியிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil