தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், இசையமைப்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான இளையராஜா தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினின் மகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் அப்போது உதயநிதி பல படங்களில் நடித்து வந்ததால், படங்களை முடித்தவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று்ககொண்ட முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க முடிவு செய்து ஆளுனரிடம் கடிதம் வழங்கினார்.
இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுனர் நேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது அமைச்சர் பணியை பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு தொடங்கினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் தற்போது இளையராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே நீங்கள் இந்த பதவி ஏற்கின்ற இந்த நாளிலே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது எனக்கு மிகவுமு் மகிழ்ச்சியை தருகிறது. அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
உண்மையிலேயே இது நடக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்று வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை நான் நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்வதற்காக களத்தில் இறங்கிவிட்டீர்கள். ஆனால் அமைச்சர் பொறுப்பு ஏற்கும்போது பொறுப்புகள் அதிகமாகிறது.
இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும், அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதை கண்டிப்பா நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“