பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சித்தூர் என்ற பெயரில் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிதியுதவி அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஷ்மீரில் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சித்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 100-க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது, இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட இந்தியாவின் பல பகுதிகளில், ராணுவ கட்டுப்பாடுகள், மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக அளிப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், "வேலியண்ட்" (Valiant) என்ற பெயரில் என் முதல் சிம்பொனி இசையை உருவாக்கினேன். 1
அந்த இசைக்கு "வீரம்" என்று பெயர் வைத்தபோது, மே மாதத்தில் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நமது உண்மையான வீரர்கள் எல்லைகளில் துணிவு, தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
"ஜெய பேரிகை கொட்டடா, கொட்டடா, ஜெய பேரிகை கொட்டடா" - பாரதி
பாரதியின் இந்த வரிகளுக்கு ஏற்ப, நமது தன்னலமற்ற வீர இதயங்கள் எதிரிகளை முறியடிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு பெருமைமிக்க இந்தியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பயங்கரவாதத்தை ஒழித்து, நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கும் நமது வீரர்களின் "வீரம்" நிறைந்த முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சியின் கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.