கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபு என்பவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை தீபா, தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் சீரியல்களில் நடித்து வந்த இவர், சீரியல் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட பல சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தவர் கணேஷ் பாபு, சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும், ஜீ தமிழ் டிவியில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த சகோதரர். ரமணன், பாபு ரெண்டு பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார். பாபு தீபாவுடன் பழகியது ரமணனுக்குப் பிடிக்காததால் இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனாலும் கணேஷ் பாபு தனது வீட்டின் எதிர்ப்பை மீறி நடிகை தீபாவை பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் முடிந்து இருவரும் தீபாவின் வீட்டில் வசித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணேஷ்பாபு தனது மனைவி தீபாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே தற்போது தனது கணவரை தன்னுடன் சேர்ந்து வைக்க வேண்டும் என்று கூறி நடிகை தீபா, வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது குறித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது கணவரின் சகோதரர் ரமணகிரிவாசன் என்பவர் தனக்கு தொடர்ந்து மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகிறார். அதேபோல் கணேஷ் பாபு குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியதாகவும் கூறியுள்ள தீபா, இதன் காரணமாகத்தான் தனக்கும் தனது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சனை இருந்தாலும் கணவர் கணேஷ் பாபுவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், இவரை தன்னுடன் சேர்ந்து வைக்க வேண்டும் என்று கூறியும் தீபா மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“