சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாகி பின்னாளில் சன்டிவியின், சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கேப்ரியல்லா செல்லூஸ் தனக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தருணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூகவலைதளமான டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா செல்லூஸ். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப் சேனல்களில், வீடியோ வெளியிட்ட இவர், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்பினை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கேப்ரியல்லா, அடுத்து, சன் டிவியில் சுந்தரி சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் சின்னத்திரையில் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
5 வருடங்கள் தாண்டி ஒளிபரப்பான சுந்தரி சீரியல் 2 சீசன்கள் வந்தது. அதன்பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்பினை பெற்ற கேப்ரியல்லா, சென்னைக்கு வந்த புதிதில், தனக்கு பல உதவிகளை செய்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இடையலி கேப்ரியல்லா தனது கணவரை பிரிந்துவிட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அதற்கு அவர் சரியான பதிலடியும் கொடுத்து வந்தார்.
இதனிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த கேப்ரியல்லா, தொடர்ந்து சுந்தரி சீரியலில் நடித்து வந்த நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தவுடன், சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், கேப்ரில்லாவுக்குகு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மகளே உனது அழுகை எனது வலிக்கும், நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே.. இவ்வுலகம் உனக்கானது மகளே.. என்னுடைய அடி மனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சித்ரா அம்மா, மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை.
எனது அன்பு கொட்டிக் கொடுக்கும் எனது மக்களின் பிரார்த்தனைக்கு உயிர் கலந்த நன்றிகள்.. இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதே எனது முதல் பிரார்த்தனையாக இறைவனிடமும், விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன். என்று அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.