/indian-express-tamil/media/media_files/2025/09/17/tamil-cinema-news-sujitha-dhansu-2025-09-17-07-56-18.jpg)
பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் நடிக்க வந்த நடிகை ஒருவர், பாக்யராஜூவுக்கு மகனாகவும், நடிகர் அஜித்துக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். அந்த நடிகை இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். அவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் பாக்யராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜூவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார், பாக்யராஜ் மனைவி பூர்ணிமா கெஸ்ட்ரோலில் நடித்திருந்த இந்த படத்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் முதல் மனைவியை இழந்த வாத்தியார், தனது கை குழந்தையுடன் ஒரு பள்ளிக்கு வாத்தியாகராக வருவார். அவரது வாழ்க்கையில் அடுத்து நடக்கும் திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில், வாத்தியாரின் மகனாக குழந்தை கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். இந்த படத்திற்கு முன்னதாகவும் அப்பாஸ் என்ற படத்தில் தோன்றியுள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் நடிக்க தொடங்கிய சுஜிதா, தமிழில் 1986-ம் ஆண்டு மந்திர புன்னகை, மனகணக்கு, பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்,
ரஜினிகாந்த், சிவாஜி, சத்யராஜ், சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சுஜிதா, இருவர் படத்தில் தமிழ் செல்வனின் மகள், வாலி படத்தில் அஜித்தின் தங்கை, பள்ளிக்கூடம், தாண்டவம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 2021-ம் ஆண்டு, ஐந்து உணர்வுகள் என்ற படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனுக்கு, மலையாளத்தில் டப்பிங் பேசியவர் சுஜிதா தான்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்ற சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், என தென்னிந்திய மொழிகளில் பல சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள சுஜிதா தனுஷ், பிறந்து 40 நாட்களில் நடிக்க வந்துள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், நான் பிறந்து 40 நாட்களில் நடிக்க வந்தேன். எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வந்த அந்த படத்தில், கே.ஆர்.விஜயா பேரனாக நடித்தேன். ஆனால் அந்த படம் வெளியாகிவில்லை. ஆனால் முதல் ரிலீஸ் ஆனது பாக்யராஜூ சாரின் முந்தானை முடிச்சு படம் தான்.
அப்போது தொடங்கி இப்போதுவரை நடித்துக்கொண்டு இருக்கிறேன். கேமாரா முன்பு இருக்கிறேன் என்றால் எனக்கு ஆசீர்வாதம் அதிகமாக இருக்கிறது. பாக்யராஜ் சாருக்கு என் குடும்பம் எப்போதும் அவர் குடும்பம் மாதிரி தான். நான் யூடியூப் சேனல் ஆரம்பித்தபோது கூட அவர் என்னை அழைத்து பாராட்டினார். எப்போதும் எங்களுக்கு அவர் குடும்ப நண்பர் தான் என்று சுஜிதா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.