Tamil Serial Baakiyalakshmi Update : விஜய் டிவியின் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விறுவிறுப்பான திரைக்கதை என்றாலும் கூட சீரியலின் டைட்டிலும் ஒரு வகையில் காரணமாக உள்ளது. விஜய்டிவியின் பெரும்பாலான சீரியல்கள் தமிழில் ஹிட்டடித்த படங்களின் டைட்டிலையே பயன்படுத்தியுள்ளது. இதனால் சீரியல் ரசிகர்களுடன் எளிதில் ஒன்றிவிடுகிறது.
ஆனால் ஒரு சில சீரியல்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். சினிமா டைட்டில் இல்லை என்றாலும், நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல் பாக்யலட்சுமி. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சுஜித்ரா, சதீஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது தோழியுடன் பழகி வரும் கணவர், கணவரே உலகம் என்று நினைத்து வரும் மனைவி, இவர்களுக்கு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டிற்கு தெரியாமல் கோபி ராதிகாவுடன் பழகி வருவது அவரது அப்பா சத்தியமூர்த்திக்கு தெரிந்துவிட்டது. இதற்காக கோபியை அவர் கண்டித்தாலும், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. ஆனாலும் கோபியை விடாத சத்தியமூர்த்தி ராதிகாவின் அம்மாவிடம் சென்று சண்டை போடுகிறார். மேலும் ராதிகாவை இனிமேல் பார்க்க கூடாது என்று கோபியிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். தற்போது சத்தியம் செய்துள்ள கோபி அதனை காப்பாற்றுவாரா அல்லது மீறுவாரா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்து பாக்யாவின் மகன் எழில் அமிர்தாவிடம் காதலை வெளிப்படுத்த அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எழிலை வெறுத்து ஒதுக்கி வருகிறார். இதனால் எழில் மன உளைச்சலில் இருந்தாலும் அமிர்தாவின் மாமனார் மாமியாரிடம் நன்றாக பழகி வருகிறார். குழந்தையிடமும் நன்றாக பழகுகிறார். ஆனாலும் அமிர்தாவிடம் இருந்து கிரீன் சிக்னல் வந்தபாடில்லை. இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து அமிர்தாவின் மாமனார் மாமியார் இருவரும் இவர்களை சேர்த்து வைக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த நிலையில், இதுவரை அரைமணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வரும் சனிக்கிழமை 3 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய் டிவியில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஒளிபரப்பாகும். ஆனால் இந்நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துவிட்டதை தொடர்ந்து பாக்யலட்சுமி சீரியலுக்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil