சின்னத்திரையின் முத்தழகு சீரியலில் நடித்து வரும் நடிகை ஷோபனா காரில் சென்றுகொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த கூலி வேலை செய்யும் பெண்கள் பலரும் சீரியல் குறித்து அவரிடம் ஆனந்தமாக கலந்துரையாடிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று முத்தழகு. மாலை 3.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஆஷிஷ் சக்ரவர்த்தி, வைஷாலி தனிகா ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியலில் முத்தழகு என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஷோபனா. கிராமத்து சுழலில் வளர்ந்த முத்தழகு நகரத்து இளைஞரை திருமணம் செய்துகொள்கிறார்.
அதன்பிறகு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு நாயகனுடன் வரும் முத்தழகு சந்திக்கும் சம்பவங்கள், தனது கணவரை விரும்பும் பெண்ணிடம் இருந்து தனக்கு வரும் இடையூறுகளை எப்படி சமாளித்தார் என்பது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே சென்னை திருவேற்காடு பகுதியில், காரில் சென்றுகொண்டிருந்த நடிகை ஷோபனாவை கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் பலரும், ஷோபனாவை வழி மறித்து பேசியுள்ளனர். அவர்களை பார்த்த ஷோபனாவும் தனது காரை நிறுத்தி அவர்களிடம் ஆனந்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதில் முத்தழகு சீரியல் சிறப்பாக இருப்பதாகவும், தங்களுக்கு வேலை முடிந்தவுடன் சீரியல் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சீ்க்கிரமாக வீட்டுக்கு சென்றுவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து உங்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டிய பெண்கள், சீரியலின் அடுத்து கதை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த ஷோபனா, நீங்கள் பார்த்துவிட்டு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க என்று கேள்வி கேட்டுள்ளார்.
இது குறித்து வீடியோ பதிவை நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், கிராமத்து பெண்கள் வரை முத்தழகு சீரியல் பிரபலமடைந்துள்ளது என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“