Tamil Serial News, Naagini 5 tv serial story: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி தொடர் ஏற்கனவே ஒளிபரப்பாகி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘நாகினி 5’ என்ற புதிய தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. இந்த தொடர் நாகினி உலகை பற்றியும் அன்பு, கோபம், எதிரிகளை பழிவாங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுள்ளது.
இத்தொடரின் நாயகி சத்ய யுகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய தனது காவியப் போரை முடிவுக்கு கொண்டு வந்து தனது காதல் பயணத்தை நிறைவேற்ற போராடுவதாக கதை செல்கிறது. ஜனவரி 21-ந்தேதி வியாழக்கிழமை இரவு 6 மணிக்கு இந்தத் தொடரின் முதல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.
இந்த புதிய தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறுகையில், ‘முற்றிலும் பொழுதுபோக்கு நிறைந்த எங்களின் வெற்றித் தொடரான நாகினியை இந்த சீசனில் மக்களுக்கு மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ‘ப்ரைம் டைம்’ தொடர்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் பலவிதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. நாகினி 5 தொடர் அந்த வரிசையில் சிறப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளதோடு இதில் சிறந்த நடிகர்களும் நடிக்கிறார்கள்.
இந்த தொடர் எங்கள் ‘ப்ரைம் டைம்’ நேரத்தின் சிறந்த தொடராக அமையும். இந்த தொடர் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு அவர்களுக்கு சிறப்பான ஒரு அனுபவத்தையும் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
இந்த தொடரின் நாயகியாக ஹினா கான் நடிக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்ய யுகத்தில், நாகினி குலத்தின் முன்னோடியாக ஆதி நாகினியாக இவர் இருக்கிறார். இந்த நிலையில் அவள் நாக் ஹரிஷை (மோகித் மல்கோத்ரா நடிக்கிறார்) அதிதீவிரமாக காதலிக்கிறாள். ஆனால் அவர்களது காதல் மகிழ்ச்சியான முடிவை எட்டுவதற்கு முன்பே, விதி அவர்களை பிரிக்கிறது.
அதே சமயம், கலு ஆகாஷ் (தீரஜ் தூப்பர் நடிக்கிறார்) நாகினியை வெறித்தனமாக காதலிக்கிறான். ஆனால் அவனது காதலை நாகினி ஏற்க மறுக்கிறாள். இதனால் பழிவாங்கும் போக்குடன் கதை துவங்குகிறது. இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் நாகினியின் காதல் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் அவள் இறக்கிறாள். அவள் இறக்கும்போது ஒரு சபதம் ஏற்கிறாள். இதனைத் தொடர்ந்து அவள் கலியுகத்தில் மறு பிறவி எடுக்கிறாள்.
கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்கவும் அவள் கலியுகத்தில் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா? அல்லது விதி அவர்களின் கதைக்கு மற்றொரு திருப்பத்தைக் கொண்டு வருமா? என்பதை தொடரின் கதையோட்டத்தில் காணலாம். 21 ஜனவரி வியாழக்கிழமை இரவு 6 மணி முதல் நாகினி 5-ன் கற்பனை உலகை காணத் தயாராக இருக்கிறீர்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"