’துருவங்கள் 16’, ’கவலை வேண்டாம்’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தான். 2018-ம் ஆண்டில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
’ராஜபீமா’, ’இவன் உத்தமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் யாஷிகா முதன்முறையாக சின்னத்திரை தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சன் டிவியில் சிபு சூரியன், பிரியங்கா நல்கரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர் ரோஜா. லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்ட இத்தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வரும் 27-ம் தேதி முதல் இத்தொடரின் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலில் அரை மணி நேரம் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 27-ம் தேதி முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய எபிசோட்களுக்கான புரமோ வீடியோக்களை சீரியல் குழுவினர் வெளியிட்டிருக்கும் நிலையில் அதில் யாஷிகா ஆனந்தின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதைப் பார்த்த ரசிகர்களிடம் மகிழ்ச்சியுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”