இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக வலம் வரும் கே.எஸ்.சித்ரா தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள நிலையில், கேரளாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடல் ஒன்றுக்கு கோரஸ் குரல் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான சிந்து பைரவி படத்தில் இடம் பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான கே.எஸ்.சித்ரா, அதே படத்தில் இடம் பெற்ற பாடறியேன், என்ற பாடலையும் பாடியிருந்தார். இந்த இரு பாடல்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கே.எஸ்.சித்ராவுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
மலையாளத்தில் படிக்க : കോറസ് പാടുന്നത് ആരാന്ന് കണ്ടോ? അതാണ് ഞങ്ങടെ ചിത്രചേച്ചി
அதனைத் தொடர்ந்து, இளையராஜா, கங்கை அமரன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா, கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீர ராஜா வீரா என்ற பாடலை பாடியிருந்தார். மேலும் துலு, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட மொழிகளிலும் பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 1979-ம் ஆண்டு தனது தாய் மொழியான மலையாளத்தில் வெளியான கும்மாட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சினிமாவில் கே.எஸ்.சித்ரா ஒரு பாடகி என்பதை விட, பணிவு, ஈர்ப்பு மற்றும் அன்பு ஆகிய குணங்கள் அடங்கிய ஒரு நல்ல பெண்மணி என்ற அடையாளம் உள்ளது. அவரின் குணாதிசயங்களைப் பல இடங்களில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் பலரும் பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் அவரின் குணாதிசயங்களை விளக்கும் வகையில் சமீபத்தில் கேரளாவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கேரளாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில், இளம் பின்னணி பாடகி அனாமிகா மற்றும் அப்சலின் பாடல்கள் பாடினர்.
இந்த பாடலுக்கு 'மெஹர்பா, மெஹர்பா' என்ற வரிகளுக்கு சித்ரா குரல் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் சித்ரா குறித்து கருத்து தெரிவித்து வருகிறது. தானே ஒரு பெரிய பின்னணி பாடகியாக இருந்தும், இளம் பாடகர்களுக்கு உதவும் வகையில், கோரஸ் குரல் கொடுத்த சித்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சித்ரா, தான் பல ஹிட் பாடல்களை கொடுத்த பெரிய பின்னணி பாடகி என்ற பெருமை கொள்ளாமல், இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில் கோரஸ் கொடுத்துள்ளார்.
'எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாடும் மனதுள்ள சித்ரா, 'இசையில் என்ன அளவு இளமை' அதுக்கு பெரிய மனசு வேணும்,'' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“