New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/10/tInP5vK0HRvUq6YfbpBn.jpg)
திருமண பயத்தில் இருக்கும் நாயகியின் வாழ்க்கையில் ஒரு உள்ளூர் ரவுடி வந்தால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து விஜய் டிவியின் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
பிரபல சின்னத்திரை நட்சத்திரமான ரேவதி முரளி, தனது திறமையாக நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள, புதிய சீரியலான "தென்றலே மெல்ல பேசு" விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மராத்தி மொழியில் பெரும் வெற்றி பெற்ற "யெட் லாக்லா பிரேமா" என்ற சீரியலின் ரீமேக்காக இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
மராத்தி சீரியலில், அழுத்தமான கதைக்களத்தையும், யதார்த்தமான கேரக்டர்களையும் தக்கவைத்துக்கொண்டு, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் இந்த தொடர் உருவாகியுள்ளது. "தென்றலே மெல்ல பேசு" தொடரின் கதை, ஒரு வலிமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. அவள் தனது வாழ்க்கையின் சவால்களைத் தனியாகவே எதிர்கொள்ளும் திறன் பெற்றிருந்தாலும், திருமணம் என்றால் பயம்.
கடந்த கால கசப்பான அனுபவங்களே அவளது இந்த பயத்திற்குக் காரணமாக இருக்கிறது. இதனால், திருமண பந்தத்தில் இருந்து விலகியே இருக்க அவள் நினைத்தாலும், விதி வேறு விதமாக விளையாடுகிறது. எதிர்பாராத விதமாக ஒரு உள்ளூர் ரவுடி அவளது வாழ்க்கையில் நுழைய, அவளது உலகமே தலைகீழாக மாறுகிறது. அவளது நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த சீரியலின் கதை.
இந்த கதை, கதாநாயகியின் உணர்வுப்பூர்வமான போராட்டங்களையும், மனரீதியான மோதல்களையும் அழகாக சித்தரிக்கிறது. அவள் தனது பயத்தை எதிர்கொண்டு, உண்மையான நட்பின் மற்றும் உறவின் அர்த்தத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறாள் என்பதை இந்த சீரியல் உணர்த்தும். நாடகம், காதல் மற்றும் சஸ்பென்ஸ் ஆகிய சரியான கலவையில் இந்த தொடரில் இருக்கும் என்றும், ரசிகர்களின் மனதை கவரும் சீரியலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரியலில், ரேவதி முரளியுடன், விமல் ராஜ், வந்தனா மைக்கேல், ஸ்ரீலேகா பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். விமல் ராஜ், முரட்டுத்தனமான அதே சமயம் இரக்க குணம் கொண்ட உள்ளூர் ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர் கதாநாயகியின் வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தனா மைக்கேல் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி ஆகியோர் கதைக்கு மேலும் ஆழத்தையும், சிக்கலையும் சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
விஜய் டிவியில் ஏற்கனவே வெளியான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலிலும், எதிர்பராத விதமாக ஒரு உள்ளூர் ரவுடி, கதாநாயகிக்கு தாளி கட்டிவிடுவார். இதனால் இவர்களுக்கு இடையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி இணைந்து நடித்திருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.