சென்னையின் அடையாளமாக கடந்த 40 வருடங்காலாக இயங்கி வந்த உதயம் திரையரங்கம் தற்போது மூடப்பட உள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் முழுதாக ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே பெரிய விஷயமாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் வருடத்திற்கு 250-300 திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சென்னையில் புதிதாக திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் செயல்பட்டும் வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் பழைய திரையரங்குகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த வகையில் தற்போது சென்னையில் அடையாளமாக திகழ்ந்து வரும் உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளது. 1983-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு வளாகத்தில், உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என 4 திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்கை கடந்த 2009-ம் ஆண்டு தான் இதன் உரிமையாளர்களில் ஒருவராக பரமகசிவம் பிள்ளை ரூ80 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இந்த உதயம் திரையரங்கு குறித்து, ‘’உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைத்தேன்’’ என்று பாடல்கள் கூட இருக்கிறது. அந்த அளவிற்கு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் இந்த திரையரங்கு இருக்கும் இடத்தை தற்போது காசாகிராண்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
உதயம் திரையரங்குக்கு அருகில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்ட நிலையில், உதயம் திரையரங்கின் மவுசு குறைந்துவிட்டது. அதேபோல் இந்த திரையரங்குக்கு அருகில் மால்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில், 22 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் சதுர அடி கொண்ட இந்த இடத்தில், 24 ஆயிரம் சதுர அடி மாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் இடத்தில் அரசின் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
தற்போது வரை 10 மாடி கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் கட்டிடத்திற்காக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உதயம் திரையரங்கு வருமானம் இல்லாத நிலையில், திரையரங்கு இருக்கும் இந்த இடத்தில் அதனை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அலுலகத்துடன் சேர்த்து குடியிருப்பு என்ற அடிப்படையில் சுமார் 25 மாடி கட்டிடம் கட்டப்ப உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயம் திரையரங்கு மூடப்படுவது 90-ஸ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“